கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய முருகன் கோவில், தனது தனித்துவமான வழிபாட்டு முறையால் நாடு முழுவதும் கவனம் ஈர்த்து வருகிறது. வழக்கமாக கோவில்களில் பூ, பால், தேங்காய் போன்றவை நெய்வேத்யமாக சமர்ப்பிக்கப்படும் நிலையில், இங்கு “மஞ்ச்” சாக்லேட் தான் பிரதான காணிக்கையாக மாறியுள்ளது.
செம்மோத் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் என அழைக்கப்படும் இந்தத் தலத்தில், “பாலமுருகன்” குழந்தைகளின் விருப்ப கடவுளாக உருவெடுத்துள்ளார். சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்த சாக்லேட் வழிபாடு தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த மரபு உருவானதற்கான காரணமாக ஒரு சிறுவனின் அனுபவம் கூறப்படுகிறது. முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த அந்த சிறுவன், விளையாட்டாக கோவில் மணி அடித்ததற்காக வீட்டில் கண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே இரவு அவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டபோது, அவன் தொடர்ந்து முருகன் பெயரை உச்சரித்ததாக தகவல். மறுநாள் பெற்றோர் அவனை கோவிலுக்கு அழைத்துச் சென்றபோது, வழக்கமான பூஜை பொருட்களுக்கு பதிலாக “மஞ்ச்” சாக்லேட்டை நிவேதனமாக வைத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவன் உடல்நலம் திரும்பியதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
அந்த ஒரு சம்பவம் இன்று கோவிலின் அடையாளமாக மாறியுள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, அனைவரும் சாக்லேட் பெட்டிகளுடன் கோவிலுக்கு வருவது வழக்கமாகியுள்ளது. சிலர் தங்கள் உடல் எடைக்கு சமமான சாக்லேட் பார்களை காணிக்கையாக வழங்கும் “மஞ்ச் துலாபாரம்” என்ற முறையும் பிரபலமடைந்துள்ளது. இந்த கோவில், மதச்சார்பற்ற பக்தியின் அடையாளமாகவும் மாறியுள்ளது. எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், “மஞ்ச் முருகன்” தலத்திற்கு வருகை தருகிறார்கள்.
குறிப்பாக, குழந்தைகளின் தேர்வு காலங்களில் “சாக்லேட் பூஜை” நடத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. பிரசாத வழங்கும் முறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய நெய்விளக்கு, பால், லட்டு ஆகியவற்றுக்கு பதிலாக இப்போது சாக்லேட்டே பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் சிறுவர்கள் அதிக ஆர்வத்துடன் கோவிலுக்கு வருவது கணிசமாக உயர்ந்துள்ளது.
Read more: RBI : வங்கித் துறையில் பெரும் மாற்றங்கள்..! 90 நாட்களுக்கும் மேலான வாராக்கடன்கள்..! விவரம் இதோ..!



