அடிக்கடி ஆன்டிபயாடிக் மருந்து எடுக்குறீங்களா..? உயிரே போகும் அபாயம்..!! ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்..!!

Antibiotics 2025

1800-களின் இறுதியிலும் 1900-களின் தொடக்கத்திலும், மருத்துவ உலகம் ஒரு மிகப்பெரிய சவாலை சந்தித்து வந்தது. அப்போது நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற சாதாரண நோய்கள் கூட மனிதர்களை கொத்துக்கொத்தாக பலி வாங்கின. இந்த இக்கட்டான சூழலில் தான், 1944-ஆம் ஆண்டு ‘பென்சிலின்’ (Penicillin) என்ற மருந்து அறிமுகமானது.


பாக்டீரியா தொற்றுகளை மிக எளிதாகக் குணப்படுத்திய இந்த மருந்தை மருத்துவர்கள் அதிசய மருந்து (Wonder Drug) என்று போற்றினார்கள். ஒரு உயிரைக் காக்கும் கருவியாக பார்க்கப்பட்ட இந்த ஆன்டிபயாடிக் மருந்துகள், நாளடைவில் மிகச் சாதாரணமாகவும், தேவையற்ற நேரங்களிலும் கூட அதிகம் பரிந்துரைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டன. ஆனால், இந்த அதீத பயன்பாடு ஆரோக்கியத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அப்போது பெரிய அளவில் உணரப்படவில்லை.

உண்மையில், நமது உடலுக்குள் ஒரு குட்டி உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நமது குடல் பகுதியில் ‘மைக்ரோபயோம்’ (Microbiome) எனப்படும் கோடிக்கணக்கான நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இவை நாம் உண்ணும் உணவை செரிக்க செய்யவும், உடலில் சேரும் நச்சுக்களை அழிக்கவும், நமது நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்தவும் மிக முக்கியமான பணிகளை செய்கின்றன.

நாம் ஒரு ஆன்டிபயாடிக் மருந்தை உட்கொள்ளும்போது, அது உடலில் உள்ள தீய பாக்டீரியாக்களை தாக்குவதோடு நின்றுவிடாமல், நமக்கு துணையாக இருக்கும் இந்த நல்ல நுண்ணுயிரிகளையும் சேர்த்தே அழித்துவிடுகிறது. இதனால் குடலின் இயற்கையான சமநிலை குலைந்து, உடலின் நோய் எதிர்ப்பு திறன் குறைகிறது. இத்தகைய பாதிப்புகள் நீண்ட காலத்தில் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் உருவாகவும் ஒரு காரணமாக அமைந்துவிடுகின்றன.

ஆன்டிபயாடிக் மருந்து பயன்பாட்டிற்கும், பெருங்குடல் புற்றுநோய் (Colorectal Cancer) பாதிப்பிற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய 2022-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் ஒரு விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 7,903 நோயாளிகளின் மருத்துவத் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. 50 வயதிற்கு உட்பட்ட இளவயதினர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவர்கள் உட்கொண்ட மருந்துகளின் அளவு ஒப்பிடப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்திய 50 வயதிற்கு உட்பட்ட இளவயதினருக்கு, பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 49 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதே சமயம், 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் இந்த பாதிப்பு 9 சதவீதமாக மட்டுமே இருந்தது.

இருப்பினும், இந்த மருந்துகள் தான் நேரடியாக புற்றுநோயை உண்டாக்குகின்றன என்பதை மருத்துவ உலகம் இன்னும் 100 சதவீதம் உறுதிப்படுத்தவில்லை. அதாவது, ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கும் புற்றுநோய்க்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ஆனால், அதுவே நேரடித் தொடக்கப்புள்ளி என்று அடித்துச் சொல்ல இன்னும் பல ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.

எனவே, சிறிய உடல்நல குறைபாடுகளுக்கு கூட உடனடியாக ஆன்டிபயாடிக் மருந்துகளை நாடுவது ஆபத்தானது. மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்தகங்களில் நேரடியாக ஆன்டிபயாடிக் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கு தேவைப்படும் குடல் நுண்ணுயிரிகளைப் பாதுகாக்க, சத்தான உணவு மற்றும் சரியான மருத்துவ வழிகாட்டுதலைப் பின்பற்றுவதே புத்திசாலித்தனம்.

Read More : மின்சார வாகனம் வாங்க போறீங்களா..? ரூ.10,000 வரை மானியம் வழங்கும் மத்திய அரசு..!! PM E-DRIVE திட்டம் பற்றி தெரியுமா..?

CHELLA

Next Post

ஆரோக்கியமான வாழ்வுக்கு சைவமா..? அசைவமா..? மருத்துவர்கள் பகிர்ந்த ரகசிய தகவல்..!!

Tue Jan 6 , 2026
ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவே அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. எனினும், உணவுப் பழக்கவழக்கங்களை பொறுத்தவரை சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரண்டில் எது சிறந்தது என்ற விவாதம் காலங்காலமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மருத்துவ ரீதியாக இந்த இரு வகை உணவுகளிலும் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து நிபுணர்கள் பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளனர். சைவ உணவு பழக்கத்தை பொறுத்தவரை, இதில் நார்ச்சத்து (Fiber) மிக அதிக […]
Veg vs Non Veg 2026

You May Like