யுபிஐ (UPI) மூலமாக அன்றாடம் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் நடைபெறும் இந்த டிஜிட்டல் யுகத்தில், பயனர்களுக்கு மிக முக்கியமான மாற்றங்களை NPCI (National Payments Corporation of India) அறிவித்துள்ளது. ஜூலை 15, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகள், தவறான அல்லது தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு உடனடி தீர்வை வழங்கும் என NPCI தெரிவித்துள்ளது.
தற்போது, யுபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்து பணம் டெபிட் ஆகியிருந்தால், அதை மீட்டெடுக்க பல நாட்கள் ஆகும். ஆனால் புதிய விதிப்படி, அந்த பணம் அடுத்த நிமிடமே பயனருக்குத் திரும்ப கிடைக்கும். அவசரத்தில் தவறாக வேறு யுபிஐ ஐடிக்கு பணம் அனுப்பினால், இனி அது “சார்ஜ்பேக்” கோரிக்கையின் கீழ் வங்கியின் வாயிலாகவே திரும்ப பெற முடியும். இதற்கு NPCI-யின் அனுமதி தேவைப்படாது என புதிய வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பணம் அனுப்பும் வேகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், தற்போது 30 வினாடிகள் எடுத்துக் கொண்ட யூபிஐ பரிவர்த்தனைகள், 10 முதல் 15 வினாடிகளுக்குள் நிறைவு பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, கடந்த மாதம் NPCI அனைத்து வங்கிகளுக்கும் மற்றும் யூபிஐ செயலிகளுக்கும் தேவையான தொழில்நுட்ப மேம்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தியது.
இந்த புதிய விதி, கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த நன்மையுடன் கூடியதாக அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் இந்த மாற்றம், யூபிஐ பரிவர்த்தனையின் விரைவில் செயல்படுவதை உறுதி செய்யும் என NPCI தெரிவித்துள்ளது.