தந்தைக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது 17 வயது மகள் தனது கல்லீரலை தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கோழலாளியில் தனது மனைவி மற்றும் 17 வயது மகளோடு வசித்து வருபவர் பிரதீஷ். உடல்நலம் பாதித்திருந்த பிரிதீஷ்க்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் அவர் உடலுக்கு ஏற்ற பொருத்தமான கல்லீரலைப் பொறுத்த முயற்சி செய்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வட்டாரத்தில் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது யாருடைய கல்லீரலும் பிரதீஷ் உடலுக்கு ஒத்துப்போகவில்லை. அவரின் மகளின் கல்லீரல் மட்டுமே பிரதீஷின் உடல் ஏற்றுக்கொள்ளும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்த அந்த 17 வயது சிறுமி தனது கல்லீரலின் ஒரு பகுதியைத் தனது தந்தைக்கு தானம் செய்ய முன்வந்தார். ஆனால், அவர் மைனராக இருப்பதால் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான சட்டத்தின் படி உறுப்பு தானம் செய்பவரின் வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும் என்பதால், மருத்துவர்கள் இந்த உறுப்பு மாற்று சிகிச்சையை செய்ய மறுத்து விட்டனர். இந்நிலையில், அந்த மாணவி கேரள உயர்நீதிமன்றத்தில் தனது தந்தையின் உயிரைக் காப்பாற்றத் தனது கல்லீரலை தானம் செய்ய தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கல்லீரலைத் தானம் செய்ய சிறுமிக்கு அனுமதி வழங்கியது. மேலும், தந்தையின் உயிரைக் காப்பாற்ற தனது கல்லீரலை தானம் செய்ய முன்வந்த அந்த சிறுமியை நீதிமன்றம் பாராட்டுவதாக நீதிபதி தெரிவித்தார். இவரை மகளாகப் பெற்ற இவரின் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தெரிவித்தார்.