முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து பேசிவந்த ஓபிஎஸ், தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவதில் காட்டி வரும் தாமதம், தினகரனை ஆவேசமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.
“மேடைக்கு மேடை ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று முழங்கியவர்கள், இப்போது கூட்டணி அமைய வேண்டிய இக்கட்டான நேரத்தில் தயக்கம் காட்டுவது ஏன்?” என தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுகவை வீழ்த்தி மீண்டும் அம்மாவின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்ற உண்மையான நோக்கம் இருந்தால், சுயநலத்தை துறந்து இப்போதே கைகோர்க்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டை ஓபிஎஸ் இன்னும் தெளிவுபடுத்தாத நிலையில், “இப்போது வராவிட்டால் அவர்களின் முகத்திரை கிழியும்” என தினகரன் பகிரங்கமாக கூறியுள்ளார். ஒற்றுமை என்ற வார்த்தையைத் தற்காப்புக்காகவும், சுயநலத்திற்காகவும் பயன்படுத்தியவர்கள் யார் என்பது இந்தத் தேர்தல் முடிவுகள் மற்றும் கூட்டணி முடிவுகள் மூலம் வெளிச்சத்திற்கு வரும் என தினகரன் சாடியுள்ளார்.



