இன்றைய நவீன வாழ்க்கை முறையில் கையில் தண்ணீர் பாட்டிலை வைத்து கொள்ளும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. குறிப்பாக பயணத்தின் போதும் கூட பலர் வாட்டர் பாட்டிலை வைத்து கொள்கின்றனர். இருப்பினும், சூடான காரில் வாட்டர் பாட்டிலை வைத்து செல்வதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. காரில் 24 மணி நேரத்திற்கு மேலாக வாட்டர் பாட்டிலை வைத்திருப்பது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதாவது காரின் வெளியே இருக்கும் வெப்ப நிலையை விட காரின் உள்ளே அதிக வெப்பநிலை நிலவும். இதன் காரணமாக காருக்குள் இருக்கும் அதிக வெப்பநிலை ஆனது, பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் உள்ள ரசாயனங்களை தண்ணீரில் கசிவதற்கு வழிவகுக்கும். இந்த இரசாயனங்கள் கலந்த தண்ணீரை குடிப்பதால் நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
குறிப்பாக பழைய பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், அதிக வெப்பநிலையில் இருக்கும்போது, பித்தலேட்டுகள் மற்றும் பிஸ்பெனால்-ஏ (பிபிஏ) போன்ற இரசாயனங்களை வெளியிடக்கூடும். இந்த இரசாயனங்கள் கலந்த தண்ணீரை நாம் குடிப்பதால் நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. புதிதாக தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில் கூட, தண்ணீரை நீண்ட நேரம் சேமித்து வைத்து குடிப்பது பாதுகாப்பற்றவை என்று சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த இரசாயனங்கள் உடலில் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கிறது.
நான்கு வாரங்களுக்கு 158°F (70°C) என்ற வெப்பநிலையில் சேமித்து வைக்கப்பட்ட 16 பிராண்டுகளின் வாட்டர் பாட்டில்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் ஆன்டிமனி மற்றும் பிஸ்பெனால் ஏ-க்கான EPA ஸ்டாண்டர்ட் -ஐ ஒரே ஒரு பிராண்ட் மட்டுமே மீறியிருப்பது தெரியவந்துள்ளது. அதேசமயம் மற்ற பிராண்டுகளின் வாட்டர் பாட்டில்களும் வெப்பநிலையில் வைத்திருக்கும்போதும் காலப்போக்கில் ஆன்டிமனி மற்றும் பிஸ்பெனால் ஏ போன்ற இரசாயனங்களை வெளியிடும் அளவு அதிகரித்தது என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், வாட்டர் பாட்டிலை ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் வைத்திருந்தால், BPA போன்ற இரசாயனங்கள் தண்ணீரில் கசிய வாய்ப்புள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் ஆனது, உடல்நல பிரச்சனைகளை தவிர்க்க, வெப்பமான சூழ்நிலையில் நீண்ட காலத்திற்கு வாட்டர் பாட்டிலை வைக்காமல் இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.
பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் அதிக வெப்ப நிலையில் வைத்திருக்கும் போது, அதிலிருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. இது காலப்போக்கில் செரிமானப் பிரச்சனைகள், சுவாசப் பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே கவனமாக இருப்பதும், 24 மணி நேரத்திற்கு மேல் காரில் வைத்திருந்த தண்ணீரை குடிப்பதைத் தவிர்ப்பதும் மிக முக்கியமாகும்.