கிரிப்டோ என்பது ஒரு ஆபத்தான முதலீடு என்றும் கிரிப்டோவில் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் இளைஞர்களுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் இந்தியாவில் இளைஞர்கள் அதிகளவில் கிரிப்டோவில் முதலீடு செய்துவருகின்றனர். ஆனால் சமீபத்தில் கிரிப்டோவின் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிந்ததை அடுத்து கிரிப்டோவில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஒரு சிலர் நல்ல பயன்களை பெற்றிருந்தாலும் பலர் கிரிப்டோவில் முதலீடு செய்து பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில், ஜெய்ப்பூரை சேர்ந்த வணிகவியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ராகுல் என்பவர் ரூ.5000 முதலீடு செய்து ஒரு சில மாதங்களில் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு லாபம் பெற்றதாகவும் இதனை அடுத்து அவர் தனது உறவினர்கள் நண்பர்களை கிரிப்டோவில் முதலீடு செய்ய தூண்டியதாகவும் அறிக்கை ஒன்று தெரிவித்திருந்தது. அதில், ராகுலின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முதலீடு செய்த சில மாதங்களில் மிகப்பெரிய சரிவை கிரிப்டோ சந்தித்தது என்றும் ஆதலால் அவர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை சுட்டிக்காட்டி பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரிப்டோவில் முதலில் செய்ய வேண்டாம் என்றும் இது குறித்து விழிப்புணர்வை நாங்கள் ஏற்படுத்தி வருகிறோம் என்றும் விரைவில் பாராளுமன்றத்தில் இது குறித்த மசோதா நிறைவேறும் என்றும் கிரிப்டோ என்பது ஒரு ஆபத்தான முதலீடு என்பதை மக்களை எச்சரிக்கும் வகையில் பிரச்சாரமாக செய்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், மசோதா தாக்கல் செய்யப்படும் வரை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பணி தொடரும் என்று தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், கிரிப்டோவில் முதலீடு செய்தால் ஒரு சில வாரங்களில் பல மடங்கு லாபம் பெறலாம் என்ற நோக்கத்தில் இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் அதிக அளவில் முதலீடு செய்வது ஆபத்தானதாக முடியும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.