இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது முற்றிலும் கோபமாக உள்ளார். எந்த நிபந்தனைகளும் இல்லாமல் சரணடையுமாறு ஈரானுக்கு டிரம்ப் நேரடியாக அறிவித்துள்ளார்.
ஈரான் மீது கடந்த சில நாட்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு தாங்கள் பொறுப்பு அல்ல என அமெரிக்கா கூறியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலடி கடுமையாக இருக்கும் என எச்சரித்து உள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்கக்கூடாது என அமெரிக்கா கூறி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதள பக்கமான ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஈரானின் உச்ச தலைவர் என அழைக்கப்படும் அயதுல்லா காமெனி எங்கு மறைந்து இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியும். அவர் எங்களுக்கு எளிதான இலக்கு. ஆனால், அவர் பாதுகாப்பாக இருக்கட்டும்.
குறைந்தபட்சம் தற்போதைக்கு அவரை கொல்லப்போவதுகிடையாது. ஆனால், சாமானிய மக்களையோ, அமெரிக்க வீரர்களையோ ஏவுகணைகளை தாக்குவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களது பொறுமை குறைந்து வருகிறது. இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துவதற்கு நன்றி.நிபந்தனையின்றி சரணடையுங்கள் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இதன்மூலம், டிரம்ப் ஈரானின் அணுசக்தி திட்டத்தை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவருமாறு மறைமுகமாகக் கூறியுள்ளார். அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மிகவும் பதட்டமான கட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் டிரம்பின் இந்த செய்தி வந்துள்ளது. ஆனால், அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவும், அதிபர் டொனால்ட் டிரம்பும் அளித்த நிபந்தனைகளை ஈரான் முற்றிலுமாக நிராகரித்து, தனது அணுசக்தி திட்டத்தைத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இஸ்ரேல் சமீபத்தில் ஈரானின் அணுசக்தி திட்டத்தை குறிவைத்துள்ளது. இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மீது பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசியுள்ளது. அணுசக்தி திட்டத்தைத் தவிர, இஸ்ரேலிய இராணுவம் ஈரானின் 10 சிறந்த அணு விஞ்ஞானிகளையும் குறிவைத்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ஈரானின் 10 சிறந்த அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்ட பிறகு, ஈரானின் அணுசக்தி திட்டம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Readmore: சேமிப்பு வட்டியை(FD) குறைத்த வங்கிகள்!. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!. என்ன காரணம்?.