வேலைவாய்ப்புத் தொடர்பான மோசடியான இணையதளங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் சார்பில் பணியாளர் சேர்ப்புக்காக https://viksitbharatrozgaryojana.org/ மற்றும் https://pmviksitbharatrozgaryojana.com/ என்ற இணையதளங்களில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த இணையதளங்களுக்கும் அமைச்சகத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றும் அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே, இது போன்ற இணையதளங்களுக்கு தனிப்பட்ட தகவல்களை பகிரவோ அல்லது பணத்தை அனுப்பவோ வேண்டாம் என்று அமைச்சகம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், பதிவு செய்வதற்காக பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதம் வேலைவாய்ப்புத் திட்ட இணையதளம் தொடங்கப்படுவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தமது 12-வது சுதந்திர தினவிழாவில் அறிவித்தார். இத்திட்டம் குறித்த உண்மையான தகவல்களையும் சேவைகளையும் அறிய வேலை வழங்குவோர் (https://pmvbry.epfindia.gov.in அல்லது https://pmvbry.labour.gov.in) என்ற இணையதளத்தை அணுகலாம் என்றும் ஒருமுறை பதிவை நிறைவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடியான இணையதளங்கள் மற்றும் தவறான பணியாளர் சேர்ப்பு தகவல்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்கம் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளது.



