மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஆக்ஸியம் 4 மிஷன் மூலம் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நேற்று புறப்பட்டனர். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நேற்று ஃபால்கன் ஏவுகணை மூலம் டிராகன் விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விமானப்படை விமானி சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் சென்ற டிராகன் விண்கலம் இன்று சர்வதேச விண்வெளி மையத்தை எட்டியது.
இந்திய விமானப்படை விமானியும் இஸ்ரோ விண்வெளி வீரருமான சுக்லா, ஆக்ஸியம்-4 மிஷனின் விமானி ஆவார், 1984 இல் ராகேஷ் சர்மாவின் புகழ்பெற்ற விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு 40 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஆக்ஸியம்-4 கமாண்டர் பெக்கி விட்சன் மற்றும் மிஷன் நிபுணர்களான ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் டிபோர் கபு ஆகியோர் ஷுக்லாவுடன் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய நேரப்படி 4 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலன் இணையும் டாக்கிங் பணி தொடங்கப்பட்டது. மிஷன் பைலட் சுபான்ஷு சுக்லா, டிராகன் விண்கலத்தை சர்வதேச விண்வெளி மையத்தோடு இணைக்கும் பணியில் ஈடுபட்டார். டிராகன் விண்கலத்தின் எச் பகுதி திறக்கப்பட்டு, 200 மீட்டர் இடைவெளியில் டாக்கிங் பணி நடைபெற்றது.
அதன்படி சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி மையத்தோடு டிராகன் விண்கலத்தை வெற்றிகரமாக இணைத்தார். இது தொடர்பான அறிவிப்பை நாசா வெளியிட்டுள்ளது. சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் 14 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி இருந்து ஆய்வு செய்வார்கள்.. விண்வெளியில் பயிற்கள் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் குறைந்த புவி ஈர்ப்பு விசையில் உடலின் தசைகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.