புதிய நிதி ஆண்டு தொடங்க உள்ள நிலையில், நாளை முதல் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.
சுங்க கட்டணம் உயர்வு
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நாளை முதல் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10% வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. கட்டண உயர்வு குறித்த அறிக்கையை நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமர்ப்பித்துள்ளது.
6 இலக்க எண் கட்டாயம்
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தங்க நகைகளின் மீது HUID 6 இலக்க எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது நாளை (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு நகைக்கடைக்கும் 6 இலக்க HUID எண் தனியாக வழங்கப்படும். ஹால்மார்க் உடன் 6 இலக்க HUID எண்கள் உள்ள தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். 2 கிராமிற்கு குறைவான எடை கொண்ட நகைகளுக்கு புதிய விதிமுறைகள் கட்டாயமில்லை. புதிய விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால் ரூ.1 லட்சம் அல்லது நகை விலையில் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் விதிமீறல் இருந்தால் அபராதம் அல்லது சிறை தண்டனையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்கள் விலை அதிகரிப்பு
நாளை முதல் வர்த்தக வாகனங்களின் விலையை 2 முதல் 5 சதவீதம் வரை உயர்த்துவது என்று டாடா மோட்டார்ஸ், மாருதி சுஜுகி, ஹோண்டா, ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, நாளை எரிவாயு சிலிண்டர் விலையில் ஏதேனும் மாற்றம் வரலாம். ஏற்கனவே சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மாற்றம் வந்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.