சிறுமிக்கு உணவில் போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.
கொல்கத்தாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அழகுக்கலை பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்று வந்துள்ளார். இந்த வகுப்பில் அந்த சிறுமிக்கு, திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தோழிகள் போல் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் சிறுமியை அந்த பெண் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து, அச்சிறுமியும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் அப்பெண்ணின் மகனும் இருந்துள்ளார். அப்போது அந்த பெண், சிறுமிக்கு சாப்பிட உணவு கொடுத்துள்ளார். இந்த உணவை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே சிறுமி சுய நினைவை இழந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து சிறுமியை அந்த பெண்ணின் மகன் படுக்கை அறைக்கு தூக்கிச்சென்று 2 முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறிது நேரத்திற்குப் பின் மயக்கம் தெளிந்த சிறுமி தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போதுதான் அந்த பெண்ணின் வீட்டில் சாப்பிட்டது போதைப்பொருள் கலந்த உணவு என்பதும், மயக்க நிலையில் இருந்த தன்னை அப்பெண்ணின் மகன் பாலியல் பலாத்காரம் செய்ததும் சிறுமிக்கு தெரியவந்தது. ஆனால், தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே யாருக்கும் சொல்லாமல் தவித்து வந்த சிறுமி, ஒருகட்டத்தில் யதார்த்தமாக தனது நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சிறுமியை காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் அந்த சிறுமி தயக்கத்துடன் இருந்த நிலையில், நண்பர்கள் கொடுக்க ஊக்கத்தில் சம்பவம் நடந்த இரு மாதங்களுக்குப் பின் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் சம்பவம் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.