தமிழ்நாட்டில் இணையதள ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், அதற்கு தடை விதித்து நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு சமீபத்தில் ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருந்தார் ஆகவே அது முறைப்படி சட்டமாக்கப்பட்டது. தற்போது இணையதள விளையாட்டு ஆணையம் மற்றும் இணையதள விளையாட்டினை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் 2023 என்ற புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டனர் இந்த புதிய விதிமுறைகள் எதிர்வரும் மே மாதம் 21 ஆம் தேதி அமலுக்கு வர இருக்கிறது.
அதன்படி உள்ளூர் மற்றும் வெளியூர் விளையாட்டு நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனங்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். தலைநகர் சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு இணையதள விளையாட்டு ஆணையத்தின் செயலாளரிடம் 1 லட்சம் ரூபாய்க்கு கொடுத்து பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். தவறான தகவல்களை கொடுத்து இந்த விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும், நிராகரிப்பு செய்வதற்கு முன்பாக விண்ணப்பம் செய்த அந்த நிறுவனத்திற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த விளையாட்டினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களும், இந்த விளையாட்டினால் தங்களுடைய பிள்ளைகளை இழந்த பெற்றோர்களும் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை வேறு அதாவது இணையதள ரம்மியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே அந்த கோரிக்கையாக இருந்தது. ஆனாலும் அதிலிருந்து மாறுபட்டு தமிழக அரசு வேறு விதமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது எந்த அளவிற்கு தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.