கடந்த 27ஆம் தேதி கரூருக்கு பிரச்சாரத்திற்கு சென்ற விஜயை பார்க்க வந்தவர்களில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூரில் விஜய் பார்க்க வந்தவர்கள் துடிதுடித்து உயிரிழந்து கொண்டிருக்க, விஜயோ களத்தில் நிற்காமல் சென்னை வந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. கரூர் சம்பவம் அந்த கட்சிக்கு பெரும் கரும்புள்ளியாக மாறியது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலான்யவு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த குழு தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்புகள் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியது. அதிலிருந்து தமிழக வெற்றி கழகம் தற்போது மீண்டு வருகிறது. சம்பவம் நடந்த 16 நாட்களுக்கு பிறகு கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் விஜய் சந்திக்க உள்ளார்.
கரூர் சம்பவத்தால் முடங்கிப் போன தமிழக வெற்றிக்கழக தொண்டர்களுக்கு உற்சாகமளிக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கையில் விஜய் இறங்கி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது இந்த மாதம் கடைசி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் சின்னம் பெறுவதற்காக தமிழக வெற்றி கழகம் விண்ணப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட 184 ஒதுக்கப்படாத சின்னங்களில், 182வது சின்னமாக ‘விசில்’ உள்ளது. விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் விசில் சின்னம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்ததால், அதையே தவெக கேட்டு பெறும் வாய்ப்பு அதிகம். கட்சித் தரப்பில் இது மக்களிடம் எளிதாகப் பரவக் கூடிய சின்னம் என கருதப்படுகிறது.
ஒருவேளை விசில் சின்னம் கிடைக்காவிட்டால், தென்னை மர தோப்பு, லேப்டாப், டெலிவிஷன், பேட், நட்சத்திரம், அகல் விளக்கு போன்றவை விருப்ப சின்னங்களாக தவெக சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், வரவிருக்கும் 2026 தேர்தலில் விஜய்யின் தவெக எந்த சின்னத்தில் மக்களிடம் களமிறங்கும்? என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: நீங்களும் மீண்டும் மீண்டும் டீயை சூடாக்கி குடிக்கிறீங்களா? உடனே நிறுத்தலன்னா ஆபத்து!



