மத்திய / மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு ஆயுள் சான்றிதழ் வீடு தேடி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள், மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள், நவம்பர் 1-ம் தேதி முதல் தங்கள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, மின்னணு ஆயுள் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை நகர மண்டல அஞ்சல் துறை செய்துள்ளது.
நேரில் சென்று ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்கும் வகையில், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் “இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி”, ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, தபால்காரர்கள் மூலம் பயோமெட்ரிக் அல்லது ஃபேஸ் ஆர்டி செயலியை பயன்படுத்தி, மின்னணு ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70/- தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், மின்னணு ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.கடந்த ஆண்டில் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம், சென்னை மண்டலத்தில் 1,00,408 மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் மின்னணு ஆயுள் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்பித்துள்ளார்கள்.
சென்னை மண்டலத்தில் உள்ள 2187 அஞ்சல் அலுவலகங்களில் பணிபுரியும் 3878-க்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மூலம் இந்த சேவையைப் பெற முடியும்இந்த மின்னணு ஆயுள் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம். மேலும் https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரி மூலம் அல்லது “Postinfo” செயலியை பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையை பதிவு செய்யலாம்.
இந்த சேவையை வழங்க அனைத்து அஞ்சலகங்களிலும் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மட்டுமன்றி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள், மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



