அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். பல முக்கிய ஆவணங்களை நடந்த சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.
அப்போது, ஆவணங்கள், லேப்டாப்புகள் போன்ற பல முக்கிய பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் விக்ரம் ரவீந்திரனின் அலுவலகங்கள் மற்றும் வீட்டிற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். அவர்களின் மனுவை பரிசீலித்த நீதிமன்றம், ‘சீல்’ நடவடிக்கையை நீக்கவும், மனுதாரர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில் நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என். ரமேஷ், பதில் மனு இன்னும் தயாராகாததால் மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என நீதிபதிகளிடம் கோரினார்.
இதனைக் கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், ஏற்கனவே இரண்டு முறை அவகாசம் வழங்கிய பின்னரும் பதில் மனு தாக்கல் செய்யாதது ஏமாற்றம் எனக் கருதி, மேலும் அவகாசம் வழங்க மறுத்தனர். ஒருங்கிணைந்த பதில் மனுவாக தாக்கல் செய்ய உள்ளதால் ஒருமுறை மட்டும் அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என். ரமேஷ் கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை தாமதப்படுத்தியதற்காக ஒரு மனுவுக்கு தலா ₹10,000 வீதம் என மூன்று நழுவிற்கு மொத்தம் ₹30,000 அபராதம் விதித்தது. மேலும் அந்த அபராதத் தொகையை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்தவும் உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.