புதுவையில் தற்போது நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இத்தகைய நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வல்லவன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் சில வாரங்களாக நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக காரைக்காலில் மூன்று தினங்களுக்கு முன்னர் ஒரு உயிர் பலியாகி இருக்கிறது. புதுவையில் நாள்தோறும் பரிசோதிக்க கூடிய நோயாளிகளில் 15 சதவீதம் பேர் நோய் தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
மக்கள் அனைத்து பொது இடங்களிலும் நோய் தொற்று விதிமுறைகளை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி பொது இடங்கள், கடற்கரை, சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் பொதுமக்கள் நிச்சயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மருத்துவமனைகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், மதுபான கடைகள் விருந்தோம்பல் மற்றும் கேலிக்கை விடுதி, அரசு அலுவலகங்கள், வியாபாரம் மற்றும் வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் தொழிற் கூடங்கள் போன்ற பகுதிகளில் பணி புரிபவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
எல்லா அரசு தனியார் நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கு 100% தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்ய வேண்டும், அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் அனைத்து அறிவுறுத்தல்களையும், வழிகாட்டுதல்களையும் நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும். நோய் தொற்று விதிமுறைகளை அதாவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது, கிருமி நாசினி பயன்படுத்துவது போன்றவைகளை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
கல்வி நிறுவனங்கள் சரியாக செயல்பட்டு நடைமுறைகளை கவனமாக பின்பற்றி 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் நிச்சயமாக முக கவசம் அணிய வேண்டும் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஆரம்பித்து இருக்கின்ற நிலையில், சமந்தப்பட்ட அதிகாரிகள் தேர்வு கூடங்கள் முறையாக சுத்தப்படுத்தப்படுவதையும், மாணவர்களின் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு தேர்வு கூடத்திலும் கிருமி நாசினிகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
தேர்வு எழுதும்போது சமூக இடைவெளி கடைபிடிப்பது மற்றும் முக கவச பயன்பாடு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை நிச்சயமாக பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல புதுவை மாநிலம் முழுவதும் இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவித்த அவர், தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும், கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும், தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.