சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வடிவேல், முருகன், கார்த்திக். நண்பர்களான இவர்கள் 3 பேரும் அந்த பகுதி குப்பைகளில் பிளாஸ்டிக் பொருட்கள், காகிதம், அட்டை, இரும்பு போன்ற பொருட்களை சேகரித்து, அதனை விற்பனை செய்து வருமானம் பார்த்து வருகின்றனர். மேலும் சாலையோரம் தங்கி வாழ்ந்து வருகின்றனர். இதில் கார்த்திக் தனது தாயார் ஜமுனாவுடன் சாலையோரமாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வடிவேல், முருகன், கார்த்திக் ஆகிய மூவரும் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது வடிவேலுக்கு, கார்த்திக்கின் தாயார் ஜமுனாவுடன் தகாத உறவு உள்ளதாக முருகன் கூறியுள்ளார். இதனை கேட்டு வடிவேல் ஆத்திரம் அடைந்தார். பின்னர் அவர் முருகனுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். எனினும் தொடர்ந்து கள்ளக்காதல் விவகாரம் குறித்து பேசியதால், ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் கடுமையாக மோதிக் கொண்டனர்.
அப்போது முருகன் அங்கிருந்த இரும்பு கம்பியால் வடிவேலுவின் முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளார். பதிலுக்கு வடிவேலு உருட்டுக் கட்டையால் முருகனின் தலையில் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த முருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த முருகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி போலீசார் வடிவேலை பிடித்து விசாரித்து வந்தனர். முருகன் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் வடிவேலுவை கைது செய்தனர்.