நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே இருக்கும் சங்கனாங்குளம் பகுதியில் குடியிருக்கும் ராமையா மகன் சந்திரன்(46). இவர் பாளையங்கோட்டை உழவர் சந்தை அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். தற்போது குலசேகரப்பட்டினம் கோவிலுக்கு சந்திரன் மாலை அணிந்து இருக்கிறார். நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக சங்கனாங்குளம் சுடுகாட்டில் 6 அடிக்கு குழிதோண்டி படுத்து கொண்டு 21 நாள் விரதத்தை தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து பக்தர் சந்திரன் கூறுகையில், எனக்கு 9 வருடங்களுக்கு முன்பு தொண்டையில் புற்றுநோய் வியாதி வந்தது. பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் நோய் குணம் ஆகவில்லை. மருத்துவர்கள் என் உயிருக்கு 21 நாள் கெடு விதித்தனர். அப்போது நான் குலசேகரப்பட்டினம் கோயிலுக்கு சென்று வழிபட்டு கடலில் நீராடினேன். உடனே புற்றுநோய் குணமானது.
பின்னர் சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக எங்கள் ஊர் சுடுகாட்டுக்காளி இருக்கும் பகுதியில் பூமிக்கு அடியில் குழி தோண்டி சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருந்து வருகிறேன். இந்த வருடம் எனது தங்கைக்கு குழந்தை இல்லாததால் அவளுக்கு குழந்தை வரம் வேண்டி பூமிக்கு அடியில் படுத்து 21 நாள் விரதம் இருந்து வருகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.