தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது. புதிய நிதி ஆண்டு தொடங்கும் நிலையில், இந்த மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சுங்கச்சாவடி கட்டண உயர்வு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் வழிகளிலும், கோவை, மதுரை செல்லும் வழிகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கக் கட்டணம் ரூ.10 முதல் ரூ. 60 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, காருக்கு ரூ.60-இல் இருந்து ரூ.70 ஆகவும், இலகுரக வாகனத்துக்கு ரூ.105-இல் இருந்து ரூ.115 ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.225-இல் இருந்து ரூ.240 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுங்கக் கட்டணம் உயர்வதால், லாரி வாடகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு வணிகர் சங்கங்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வாகன ஓட்டிகளும் டோல்கேட் கட்டண உயர்வைக் கைவிடக்கோரி கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.