தற்போது உள்ள காலகட்டத்தில் அரசு துறைகளில் இருந்து தனியார் துறைகள் வரையில் பல விதத்தில் போலிகள் உலா வருகின்றன. போலி ரேஷன் கார்டு, போலி பிறப்புச் சான்று, போலி இருப்பிடச்சான்று என்று எதற்கெடுத்தாலும் அனைத்திலும் போலி வந்துவிட்டது. இது போல ஒரு போலி சான்றிதழ் சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.
சென்னையை அடுத்த படப்பையை சார்ந்தவர் மோகன் இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கியிருந்தார். அதில் கோவூரை சேர்ந்த செல்வம், அவருடைய மகன் மகேஷ் உள்ளிட்டோர் போலியான வாரிசு சான்றிதழ் போன்ற ஆவணங்களை தயார் செய்து எனக்கு சொந்தமான விருகம்பாக்கத்தில் இருக்கின்ற 80 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரிப்பு செய்து விட்டனர். ஆகவே அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு அவர்களால் அபகரிக்கப்பட்ட சொத்தை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
தொடர்ச்சியாக இது போன்ற பலவிதமான தவறுகள் நடைபெற்று வருவதால் இது தொடர்பான சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறை ஆணையர் சங்கர் ஜீவால் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருக்கின்ற நில மோசடி தடுப்பு பிரிவு உதவி ஆணையர் ஆனந்தராமன், ஆய்வாளர் ஞானசித்ரா உள்ளிட்டோர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்தனர். இதில் நிலை மோசடி நடந்தது உண்மைதான் என்பது உறுதியானது. இதனை தொடர்ந்து செல்வம் மற்றும் அவருடைய மகன் மகேஷ் உள்ளிட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.