திங்கட்கிழமை, ஓமன் நாட்டு பகுதியில், வெடிகுண்டு ஏந்திய ட்ரோன் படகு ஒன்று மார்ஷல் தீவுகள் கொடி ஏந்திய எண்ணெய் டேங்கர் கப்பல் மீது மோதி தாக்கியதாக ஓமன் அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த ஒரு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அமெரிக்கா–இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்துள்ள சூழ்நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மஸ்கட் கடற்கரையருகே தாக்குதல்
ஒமான் அரசின் செய்தி நிறுவனம் தலைநகர் மஸ்கட் கடற்கரையருகே உள்ள ஓமான் வளைகுடா பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான கப்பலின் பெயர் MKD VYOM என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்த கப்பல் பணியாளர் இந்தியர் எனவும், ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை, ராய்டர்ஸ் செய்தி நிறுவனம், MKD VYOM டேங்கர் கப்பல் மீது ஒரு ஏவுகணை அல்லது பொருள் மோதியதாக செய்தி வெளியிட்டிருந்தது. கப்பல் ஓமான் கடற்கரையருகே சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாகவும், இதில் ஒரு பணியாளர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
கப்பலை நிர்வகித்து வரும் V.Ships நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “2026 மார்ச் 1 அன்று, ஓமான் மஸ்கட் கடற்கரையருகே கப்பல் சென்று கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமான ஏவுகணை தாக்குதலால் வெடிப்பும் தீப்பற்றலும் ஏற்பட்டது. அந்த நேரத்தில் இயந்திர அறையில் (engine room) பணியில் இருந்த ஒரு பணியாளர் உயிரிழந்ததை மிகுந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
ஓமன் தாக்குதல்கள் குறித்து ஈரான் கூறியது
மத்திய கிழக்கு போர் தொடரும் நிலையில், ஈரான், பாரசீக வளைகுடாவின் நுழைவாயிலாக கருதப்படும் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களை எச்சரித்து வருகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, ஈரான் மீது பெரிய அளவிலான விமான தாக்குதல்களை தொடங்கியதற்குப் பிறகு, இந்தப் போர் தீவிரமடைந்துள்ளது.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, வளைகுடா நாடுகளில் நடந்த தாக்குதல்கள் குறித்து கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஓமான், ஈரான் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் இடையே நடுநிலையாக செயல்பட்டு வரும் நிலையில், இந்த தாக்குதல் அரசின் நேரடி முடிவல்ல என்றும், ஆயுதப்படைகள் பொதுவான உத்தரவுகளின் அடிப்படையில் “சுயமாக செயல்பட்டு வருகின்றன” என்றும் அராக்சி கூறினார்.
மற்றொரு டேங்கரில் இந்தியர்கள் – மேலும் தாக்குதல்
நேற்று பலாவு கொடி ஏந்திய மற்றொரு எண்ணெய் டேங்கர் கப்பலில் 15 இந்தியர்கள் இருந்த போது, ஓமான் நாட்டின் முசுண்டம் தீபகற்பம் அருகே அது தாக்குதலுக்கு உள்ளானது. இதில் 4 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல், ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையே பரஸ்பர தாக்குதல்கள் நடைபெற்று வந்த சூழ்நிலையில் நடந்துள்ளது. இதற்கு முன், சனிக்கிழமை நடந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக கூறப்பட்டது.
ஸ்கைலைட் டேங்கர் – குழுவினர் மீட்பு
ஓமன் கடல் பாதுகாப்பு மையம் வெளியிட்ட தகவலின்படி, ஸ்கைலைட் என்ற டேங்கர் கப்பல், முசந்தம் பகுதியின் கசாப் துறைமுகத்திலிருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில் தாக்குதலுக்கு உள்ளானது. கப்பலில் இருந்த 20 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்த குழுவில் 15 இந்தியர்கள் மற்றும் 5 ஈரானியர்கள் இருந்ததாக OMSC தெரிவித்துள்ளது. ஆரம்ப தகவல்களின்படி, நால்வர் வெவ்வேறு அளவிலான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கப்பலின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் Sea Force Inc என்றும், நிர்வாகம் Red Sea Ship Management LLC மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில், ஈரானிய எண்ணெய் கடத்த “நிழல் கப்பல் படை” (shadow fleet) இயக்கியதாக குற்றம் சாட்டி, அமெரிக்கா, இந்த நிறுவனங்களுக்கும் கப்பலுக்கும் தடைகள் விதித்திருந்தது.
ஹார்மூஸ் நீரிணையில் டேங்கர் மூழ்கியது – ஈரான் தகவல்
ஞாயிற்றுக்கிழமை, ஈரான் அரசு தொலைக்காட்சி, ஹார்மூஸ் நீரிணை வழியாக “சட்டவிரோதமாக” செல்ல முயன்ற ஒரு எண்ணெய் டேங்கர் தாக்குதலுக்குப் பிறகு மூழ்கி வருவதாக செய்தி வெளியிட்டது. ஹோர்மூஸ் நீரிணையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற குற்றவாளி எண்ணெய் டேங்கரின் நிலை – அது தற்போது மூழ்கி வருகிறது” என்று ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்தது.
அந்த காட்சிகளில், கடலில் எரிந்து கொண்டிருக்கும் கப்பலிலிருந்து கருப்பு புகை அடர்த்தியாக எழுவது காட்டப்பட்டது. இந்த நீரிணை வழியாக உலகின் கடல் வழி எண்ணெய் வர்த்தகத்தின் நான்கில் ஒரு பங்கு, மேலும் திரவ இயற்கை எரிவாயுவின் ஐந்தில் ஒரு பங்கு கடத்தப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை ஈரானின் புரட்சிப் படை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் இந்த முக்கிய கடல்வழி பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும், அதனால் கப்பல்களுக்கு மூடப்பட்டுள்ளதாகவும் எச்சரித்திருந்தது.



