இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸையும் சேர்த்து ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (‘ஆண்டர்சன் – சச்சின் டிராபி’) பங்கேற்கிறது. லீட்சில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் பர்மிங்ஹாமின், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587, இங்கிலாந்து 407 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 64/1 ரன் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் நிதானமாக ஆடிய ராகுல் (55) அரைசதம் கடந்தார். பின் இணைந்த ரிஷாப் பன்ட், கேப்டன் சுப்மன் கில் ஜோடி நம்பிக்கை தந்தது. டங் வீசிய 40வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார் கில். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பன்ட், 48 பந்தில் அரைசதம் விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு 110 ரன் சேர்த்த போது பஷிர் ‘சுழலில்’ பன்ட் (65) சிக்கினார். சுப்மன் கில், தனது 8வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். ரூட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரவிந்திர ஜடேஜா, அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய சுப்மன் கில், ரூட் பந்தை சிக்சருக்கு அனுப்பி 150 ரன்னை எட்டினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 175 ரன் சேர்த்த போது பஷிர் பந்தில் கில் (161) அவுட்டானார். இந்திய அணி 2வது இன்னிங்சில் 427/6 ரன்னுக்கு ‘டிக்ளேர்’ செய்தது. ஜடேஜா (69), வாஷிங்டன் சுந்தர் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.
பின் 608 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி 7 ஓவரில் 43/2 ரன் எடுத்து திணறியது. போப் (15), ரூட் (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் சிராஜ், ஆகாஷ் தீப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இங்கிலாந்து மண்ணில் அதிக சிக்சர் விளாசிய அன்னிய வீரர்கள் வரிசையில் இந்தியாவின் ரிஷாப் பன்ட் (23 சிக்சர்) முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (17 சிக்சர்), வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் (16) உள்ளனர்.
கேப்டனாக அறிமுகமான முதல் டெஸ்ட் தொடரில், அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்தார் சுப்மன் கில். இதுவரை 4 இன்னிங்சில், 519* ரன் குவித்துள்ளார். இதற்கு முன், விராத் கோலி 449 ரன் (எதிர்: ஆஸி., 2014-15) எடுத்திருந்தார்.
இதுமட்டுமல்லாமல், இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸையும் சேர்த்து ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதுவரை இந்திய அணி டெஸ்ட் மேட்ச் ஒன்றி அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவே, 1000 ரன்களை கடப்பதும் இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னதாக 2004ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி மைதானத்தில் 916 ரன்களை அடித்திருந்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்தநிலையில் இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
Readmore: ஆஹா!. குழந்தை பெறும் பள்ளி மாணவியர்களுக்கு ரூ.1 லட்சம் உதவி தொகை வழங்கும் அரசு!.