பல ஆண்டுகளாக வளசரவாக்கத்தில் பிளாஷ் கன்சல்டேஷன் என்ற பெயரில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடிகை அல்போன்சாவின் சகோதரி ஷோபா வசந்த் நடத்தி வந்துள்ளார். இந்நிறுவனம் மூலம் மாதம் ரூ.3 லட்சம் சம்பளத்தில் கனடா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் என்று வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்துள்ளார். இதனால், பலரும் மகன், மகள், உறவினர்களுக்கு வேலை வாங்கி தருமாறு கூறியிருக்கிறார்கள். இதற்காக அவர்களிடம் பணமும் பெற்றுள்ளார். மேலும், அம்பத்தூரைச் சேர்ந்த அஷ்ரப் அகம்மத் என்பவர் தனது மகனுக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதற்காக ரூ.3.5 லட்சம் கொடுத்திருக்கிறார். கடந்த 2019இல் வளசரவாக்கத்தில் இயங்கி வந்த அலுவலகத்தில் வைத்து பணத்தை கொடுத்திருக்கிறார். ஆனால், 6 மாதங்கள் ஆகியும் வேலை வரவில்லை. இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது சாக்கு போக்கு சொல்லி காலத்தை கடத்தி வந்திருக்கிறார்கள்.
இதே போன்று பணம் கொடுத்தவர்கள் பலரும் ஷோபாவை கேட்டு வந்துள்ளனர். முரளி மற்றும் பார்த்திபன் நடிப்பில் வந்த வெற்றிக்கொடிகட்டு படம் போன்று அலுவலகத்தை மாற்றியிருக்கிறார். வளசரவாக்கத்தில் இருந்த தனது அலுவலகத்தை நொளம்பூருக்கு மாற்றியிருக்கிறார். இதையடுத்து, பணம் ஏமாந்தவர்கள் வாட்ஸ் அப் குழு உருவாக்கி பல இடங்களில் தேடி வந்துள்ளனர். கடைசியாக நொளம்பூரில் அலுவலகம் இருப்பதை கண்டறிந்து ஷோபாவிடம் கேட்டுள்ளனர். அப்போதும் பல்வேறு காரணங்களை சொல்லி இழுத்தடித்து வந்துள்ளார். ஒரு வழியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பணம் வாங்கிய அனைவருக்கும் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்திருக்கிறார். மார்ச் மாதமும் வந்துவிட்டது. எல்லோரும் வேலை கிடைத்துவிடும் என்று குஷியோடு நொளம்பூர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கும், அலுவலகத்தை காலி செய்துள்ளார். செல்போனுக்கு தொடர்பு கொண்டால் போன் சுவிட்ச் ஆப். இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் ஷோபா மீது அகமது அஷ்ரப், ரஜினி ராணா உள்பட பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரைத் தொடர்ந்து 10 மாதங்களாக தேடி வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கேளம்பாக்கத்தில் உள்ள விடுதியில் அவர் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். ஷோபா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரால் மோசடி செய்யப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, தனது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தன்னிடம் ரூ.7 லட்சம் ரூபாய் வரையில் பெற்றதாக ரஜினி ராணா என்பவர் தெரிவித்துள்ளார். இவரைப் போன்று, ஆவடியை சேர்ந்தவர் ரூ.15 லட்சம் ஏமாந்ததாக கூறியுள்ளார். இவர்களைப் போன்று இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்களாம். அவர்களிடம் கோடிக்கணக்கில் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.