கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் பெற அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், மாற்றுத்திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அறிவுசார் திறன் குறைபாடு உள்ளவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக பெற்றிடும் வகையில், 07.09.2023 முதல் முதற்கட்டமாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது,
மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகள் அனைவரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை இணையதளம் வழியாக உடனுக்குடன் பெறுகின்ற வசதியினை அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப் படுத்த தேவையான மென்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட பணிகள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNEGA) வழியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து இறுதிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை முழுமையாக செயல்படுத்த, போதிய கால அவகாசம் தேவைப்படுகின்ற நிலையில், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 30.09.2025 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை, 31.10.2025 வரை மேலும் ஒரு மாத காலத்திற்க்கு நீட்டித்து பயணிகள் சிரமுமின்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் பயனாளிகள், இத்திட்டத்தின் வாயிலாக எவ்வித சிரமுமின்றி தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு 2025-26 ஆம் நிதி ஆண்டில் இணையதளம் வாயிலாக பேருந்து பயண அட்டையை புதுப்பிக்க ஏதுவாகவும், இவ்வசதியினை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பயனாளிகளும் பயன் பெறும் வழியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் (விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி) விரிவு படுத்த ஏதுவாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.