தன் ஊரில் இருக்கும் பல ஏழை இளைஞர்களையும் ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சி மையம் நடத்தி வந்தவரின் 5 வயது மகன் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து இறந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணாபுரம் நாட்டாமை தெருவை சார்ந்தவர் சிவன் மாரி. இவருக்கு இந்திய ராணுவத்தின் மீது அளவு கடந்த பற்று உண்டு. அதன் காரணமாகவே தனது ஊருக்கு அருகில் ஏழை எளிய மாணவர்களும் பயன்பெறும் வகையில் ராணுவ பயிற்சி பள்ளி ஒன்றை அச்சம்பட்டி என்ற இடத்தில் நடத்தி வந்தார் இங்கு பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மதியம் இலவசமாக உணவும் வழங்கப்படுகிறது. இவரது பயிற்சி மையத்தின் மூலம் ஏராளமான மாணவர்கள் இந்திய ராணுவத்தில் பணிக்கு தேர்வு செய்து தேர்வாகியுள்ளனர்.
இந்நிலையில் இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடந்த மூன்றாம் தேதி தனது பயிற்சி மையத்திற்கு வருகை தந்துள்ளார். அப்போது தனியாகச் சென்று விளையாடிக் கொண்டிருந்த இவரது ஐந்து வயது மகன் இஷாந்த் மாணவர்களுக்கு தயாராகிக் கொண்டிருந்த சாம்பார் சட்டிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளான். இதில் படுகாயமடைந்த இஷாந்தை கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட சிறுவனை மதுரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். இது சம்பந்தமாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.