தவறான கணக்கீடு செய்யும் கணக்கீட்டாளர் மீது துணை நிதி கட்டுபாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து துணை நிதி கட்டுபாட்டாளர்களுக்கு நிதி இயக்குநர் எழுதிய கடிதத்தில் ; துணை நிதி கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் வட்டங்களில் நடக்கும் பணிகள் குறித்த விவரங்களை அந்தந்த தலைமை பிரிவு அலுவலங்களுக்கு தெரிவிக்க வேண்டும். இருப்பினும் அவ்வப்போது மின்கணக்கீட்டு பணியாளர்கள் தவறாக மின்கணக்கீடு செய்வதால் வாரியத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. துணை நிதி கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் கணக்கீட்டு ஆய்வாளர் தங்கள் வட்டத்துக்குள் உள்ள தாழ்வழுத்த பிரிவில் அசாதாரணமாக வரும் கணக்கீட்டு அறிக்கைகளை ஆய்வு செய்தால் இந்த தவறுகள் நடப்பதை தவிர்த்திருக்கலாம்.
இதேபோல தவறான கணக்கீடுகளை தொடர்ந்து மேற்கொள்ளும் பணியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே கணக்கீட்டில் ஏதாவது அசாதாரணமான நடவடிக்கை இருந்தால் அதை உடனடியாக சம்பந்தப்பட்ட தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அதை தொடர்ந்து அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதை முறையாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.