ராமதாஸ் – அன்புமணி மோதலால் மன உளைச்சலில் இருப்பதாக பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ள நிலையில், இருவரின் பிரிவுக்கு முக்கிய காரணமே அவர் தான் என பாமக பொருளாளர் திலகபாமா பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மனகசப்பை போக்க சமாதான முயற்சிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில், இரு தரப்பும் சுமுகமாக செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், ராமதாஸின் செய்தியாளர்கள் சந்திப்பு இந்த பிரச்சனையை மேலும், அதிகப்படுத்தவே செய்தது. தனது மகன் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் சுமத்தியால், பாமகவினரே அதிர்ச்சி அடைந்தனர்.
அதேபோல், நேற்று திலகபாமாவை பாமகவின் பொருளாளர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியிருந்த நிலையில், பொருளாளர் பதவியில் திலகபாமாவே நீடிப்பார் என அன்புமணி அறிவிப்பு வெளியிட்டார். மேலும், அவர் நீக்குவதாக கூறும் நிர்வாகிகள் தங்கள் பதவியில் தொடர்ந்து நீடிப்பார்கள் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி தெரிவித்தார்.
இந்நிலையில் தான், அன்புமணி – ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமாக இருக்கும் நிலையில், இதற்கு முக்கிய காரணமே ஜி.கே.மணி தான் என்று பாமக பொருளாளர் திலகபாமா பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் என்பவரிடம் திலகபாமா பேசுகிறார். அதில், ராமதாஸையும், அன்புமணியையும் பிரித்து வைத்ததே ஜி.கே.மணி தான் என்றும், கட்சியை ஒன்றும் இல்லாமல் ஆக்குவதற்கான வேலையை அவர் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், உங்களுக்கு உள்ள நடக்குற அரசியல் பற்றி தெரியாது. தலைவரை காலி செய்வதற்காக ஜி.கே.மணி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். ராமதாஸை வைத்து எப்படி கட்சியை வளர்ப்பீங்க..? தலைவர் வேண்டாமா..? என்னை விஷக்கிருமி என்று சொன்னவர்கள் கூட நின்று எதுக்கு பேட்டி கொடுக்குறீங்க..? என்று ஒன்றிய செயலாளரை காட்டமாக பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.