ஹைதி நாட்டின் தலைநகருக்கு அருகில் உள்ள கென்ஸ்காஃப் கிராமத்தின் மீது ஆயுதம் ஏந்திய கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில் குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் ஹைதியில் நடந்த மிகப்பெரிய பெருந்திரள் கடத்தல்களில் இதுவும் ஒன்றாகும் என்று அஞ்சப்படுகிறது. தேவாலயம் ஒன்றில் பாதுகாப்புத் தேடித் தஞ்சம் புகுந்த 22 பேர் உட்பட குறைந்தது 47 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். பலியானவர்களில் குறைந்தது 5 குழந்தைகள் அடங்குவர். மேலும், இத்தாக்குதலில் 25 வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதுடன், மேயரின் உறவினர் உள்ளிட்ட அரசாங்க ஊழியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், அப்பகுதியில் பாதுகாப்பு மேம்பட்டு வருவதாகக் கூறப்பட்ட நம்பிக்கையை இந்தத் தாக்குதல் தகர்த்துள்ளது. ‘ஐசோ 2’ (Izo 2) என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கேங் தலைவன், ஹைதி தேசிய காவல்துறை இயக்குநர் விளாடிமிர் பாரைசானுக்கு சமூக வலைத்தளம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளான். போலீசார் அல்லது பாதுகாப்புப் படையினர் தங்களது கும்பலைச் சேர்ந்த யாரையாவது தாக்கினால், பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள அனைவரையும் கொன்றுவிடுவதாக கேங் தலைவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு மிரட்டல் விடுத்துள்ளான்.
ஹைதியில் கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடைபெறாத பொதுத் தேர்தல் வரும் டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசாங்கத்திற்கும் போலீசாருக்கும் ஒரு எச்சரிக்கையாகவும், தங்களது பலத்தைக் காட்டவுமே இந்தக் கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டெரெஸ், தொடரும் இந்தக் கும்பல் தாக்குதல்களும் உயிரிழப்புகளும் ஹைதியின் ஆபத்தான பாதுகாப்புச் சூழலையே சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்துள்ளார். ஹைதியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் (Port-au-Prince) 70 சதவீதப் பகுதிகள் இத்தகைய ஆயுதக் கும்பல்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. நாடு முழுவதும் இதுவரை சுமார் 15 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், இந்த ஆண்டின் முதல் பாதியில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும் ஐ.நா. புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.



