பழனியில் உள்ள காதலனை பார்ப்பதற்காக இலங்கை இளம்பெண் ஒருவர் தன் செயினை விற்று அந்த பணத்தில் கள்ளப் படகில் ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளார்.
ராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் ஒரு இளம்பெண் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின் அங்குச் சென்ற கடலோரப் பாதுகாப்பு குழுமம் மற்றும் க்யூ பிரிவு போலீஸார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில் இலங்கை, ஆண்டான்குளம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகனின் மகளான விதுர்ஷியா (24) என்பது தெரிய வந்தது.
கடந்த 2003-ம் ஆண்டு இலங்கையில் போர் தீவிரமடைந்த நிலையில் தனது பெற்றோருடன் அகதியாக இந்தியா வந்துள்ளார். பழனிக்கு வந்த அவர் தனியாக வாடகை வீட்டில் தங்கி கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். அப்போது தன்னுடன் படித்த கவி பிரகாஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
பின்னர் 2016-ம் ஆண்டு தனது பெற்றோருடன் விதுர்ஷியா இலங்கைக்கு விமானம் மூலம் திரும்பிச் சென்றுள்ளார். தொடர்ந்து பெற்றோரின் சம்மதத்துடன் இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அங்கிருந்து மீண்டும் இந்தியா வர இந்தியத் தூதரகத்தில் விண்ணப்பித்தபோது விதுர்ஷியாவுக்கு விசா மறுக்கப்பட்டது. இதனால் தனது காதலனை கரம் பிடிக்க விதுர்ஷியா கள்ளப்படகில் இந்தியாவிற்கு வர முடிவெடுத்தார்.
இதற்காக தனது நகையை விற்று இரண்டு லட்ச ரூபாய் பணத்தை திரட்டி கள்ளப்படகில் ராமேஸ்வரத்திற்கு வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் முகாமில் தங்க வைத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.