பல்வேறு வீட்டுவசதித் திட்டங்களின் கீழ் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை 10% இலிருந்து 15% ஆக உயர்த்தப்படுவதாக கர்நாடக அமைச்சரவையில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக, எதிர்க்கட்சியான பாஜக இந்த நடவடிக்கையை “அரசியலமைப்புக்கு விரோதமானது” என்று குற்றம்சாட்டியுள்ளது. அமைச்சர்களின் படி, இந்த நடவடிக்கை மக்கள் தொகை நிலவரங்களுக்கும், மற்றும் தற்போதுள்ள மத்திய வழிகாட்டுதல்கள் இரண்டிற்கும் ஒத்துப்போகிறது. இந்த உயர்த்தப்பட்ட ஒதுக்கீடு அனைத்து சிறுபான்மையினருக்கும், அதாவது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஜெயின்கள் ஆகியோருக்கும் பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் அனைத்து அரசு வீடு திட்டங்களுக்கும் பொருந்தும். இது தொடர்பாக வீட்டு வசதி அமைச்சர் சமீர் அக்மத் கான் கூறியதாவது, குறைந்த செலவில் வீடு பெறுவதில் இடர்படுகின்ற சிறுபான்மையினரின் நீண்டகால கோரிக்கைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த முடிவு, காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் அரசியலமைப்பு கொள்கைகளை மீறி மத அடிப்படையிலான நிகழ்ச்சி நிரலை முன்வைப்பதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஒதுக்கீடு மாற்றத்தை ஆதரித்து பேசிய துணை முதல்வர் டி.கே. சிவகுமார், நகரங்களிலும் பேரூராட்சிகளிலும் பல வீடுகள் காலியாக உள்ளதை குறிப்பிட்டார். எனவே புதிய ஒதுக்கீடு, காலியிடங்களில் வீடுகளின் பயன்பாடு மற்றும் மக்களின் தேவை ஆகிய இரண்டையும் நிறைவேற்ற உதவக்கூடும் என்று அவர் கூறினார். மேலும், “மாண்ட்யா மாவட்டத்தில் 7 முதல் 9 மாடிக் கோபுரங்கள் வரை கட்டப்பட்டுள்ளன, ஆனால் ஒருவரும் குடியேறவில்லை.” சிறுபான்மையினர் அந்த கட்டிடங்களில் குடியேற தயாராக இருக்கிறார்கள். “நகர்ப் பகுதிகளில் சிறுபான்மையினர் அதிக அளவில் வசிக்கிறார்கள். இதனால் மற்றவர்களுக்கு வீடுகள் ஒதுக்க முடியவில்லை. அதனால்தான் அவர்கள் 10%-15% ஒதுக்கீடை கோருகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
இதுமட்டுமல்லாமல், பெங்களூருவிலும் இதேபோன்ற நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அங்கு அரசுத் திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.”நாங்கள் வீடுகளை கட்டியிருக்கிறோம், ஆனால் யாரும் குடியேறவில்லை,” என்று அவர் கூறினார். மேலும், இந்த ஒதுக்கீடு அதிகரிப்பு ஒரு நீண்டநாள் நிலுவையில் இருந்த கோரிக்கை எனவும் கூறினார். “கடந்த ஏழு ஆண்டுகளில் இதை அவர்கள் முன்மொழிந்தார்கள், இப்போது நாங்கள் ஒப்புக் கொண்டோம்,” என்றார்.