சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசின் செயலுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பானுமதி என்பவரிடம் இணையவழியில் ரூ.84.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பஞ்சாபைச் சேர்ந்தவொரு நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடந்தாண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டார். இணையதள மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி சந்தீப் மேத்தா, ஜோய்மால்யா பாக்சி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “சைபர் குற்றங்களை செய்பவருக்கு எதிராக குண்டர் சட்டத்தை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி வருகிறது. இதுபோன்ற குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கமான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வது பலனளிக்கவில்லை” என்று கருத்து தெரிவித்தது.
அதில், இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், அரசின் இந்த நடவடிக்கையானது வரவேற்கத்தக்கதொரு நகர்வு என்றும், வழக்கமான குற்றவியல் சட்டங்களால் குற்றவாளிகளைத் தடுக்க பயனளிக்காதபோது, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்வது மிக நல்லதொரு நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளை(ஜூன்.25) மறுதினத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.