பெரியப்பா மகனுடன் உறவு வைத்துக்கொண்டதன் விளைவாக பிறந்த குழந்தையை, ஜன்னல் வழியே தூக்கி வீசிய இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்
மும்பை அருகே நவிமும்பை உல்வே என்ற இடத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு கீழே, பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று கிடந்தது. இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, குழந்தை கிடந்த கட்டடத்தில் உள்ளவர்களிடம் குழந்தை யாருக்கு சொந்தம் என்று போலீசார் விசாரித்தனர். ஆனால் சரியான தகவல் கிடைக்கவில்லை. கட்டடத்திற்கு வெளியில் இருந்து பார்த்த போது இரண்டாவது மாடியில் ஒரு வீட்டில் கழிவறை ஜன்னலில் கிரில் போடாமல் இருந்தது. உடனே அங்கு சென்று போலீஸார் விசாரித்தனர். வீட்டில் இருந்தவர், வீட்டில் எனது சகோதரரின் 19 வயது மகளும் தங்கி இருப்பதாக தெரிவித்தார். அவருக்கு வயிற்று வலி வந்ததாகவும், உள்ளூர் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்று மருந்து வாங்கிக் கொடுத்ததாகவும் தெரிவித்தார். அன்று இரவு திடீரென கழிவறைக்கு சென்ற அப்பெண் வயிற்று வலியால் உள்ளிருந்து அழுதார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ பிடிக்க சென்றதாக தெரிவித்தார். ஆட்டோவுடன் வீட்டிற்கு வந்த போது அப்பெண் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அதோடு தனக்கு வயிற்று வழி சரியாகிவிட்டதாகவும் தெரிவித்தார் என்று போலீசாரிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து அப்பெண்ணிடம் விசாரிக்கையில், தனது பெரியப்பா மகனுடன் உறவு வைத்துக்கொண்டதால் கர்ப்பமாகிவிட்டதாக தெரிவித்தார். அதோடு 8 மாதம் ஆன பிறகு வயிறு பெரியதாக தெரியாத காரணத்தால் இது குறித்து தனது குடும்பத்தினரிடமோ அல்லது தங்கி இருந்த தனது பெரியப்பா வீட்டிலோ சொல்லவில்லை என்று தெரிவித்தார். இரவு நேரத்தில் கழிவறையில் குழந்தை பிறந்ததால் அதனை மறைக்க ஜன்னல் வழியாக வெளியில் தூக்கி வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.