80, 90-களில் ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவரது சிரிப்பு, குறும்புத்தனமான நடிப்பு பலரையும் ரசிக்க வைத்தது. அந்த காலத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு ஒரு சரியான போட்டியாக திகழ்ந்தார் கார்த்திக். அதுமட்டுமின்றி காமெடியிலும் கைதேர்ந்தவர் இவர். கவுண்டமணியுடன் இவர் இணைந்து நடித்த காமெடி படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற பல படங்களில் இவர்கள் காம்போவில் வேற லெவலில் இருந்தது. அதுமட்டுமின்றி காதல் படங்களிலும் பட்டையை கிளப்புவார்.

இதற்கு எடுத்துக்காட்டாக மௌன ராகம் படம் ஒன்றே போதும். இந்த படத்தில் சில காட்சிகள் மட்டுமே கார்த்திக் நடித்தாலும் ரசிகர்களின் மனதை வருடி சென்றிருப்பார். இப்படி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த கார்த்திக்கு காலில் மிகப்பெரிய பிரச்சனை உள்ளதாம். ஒரு இடத்தில் 15 நிமிடங்களுக்கு மேல் அவரால் நிற்க முடியாதாம். அதாவது கார்த்திக் உடற்பயிற்சி மூலம் தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்ளக் கூடியவர். 60 வயதைக் கடந்தும் தற்போதும் இளமையாகவே உள்ளார். கடந்தாண்டு உடற்பயிற்சி செய்யும்போது தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கனவே ஒரு விபத்தால் அதே காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் இப்போதும் அடிபட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், எலும்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், கார்த்திக் அறுவை சிகிச்சை செய்யாமல் தற்போது வரை அதே வலியுடன் அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பதை அறிந்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர். மேலும், இப்போது பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் கார்த்திக் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.