வரும் 28-ம் தேதி அன்று நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II மற்றும் தொகுதி-IIA பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலை தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைப்புரிய வேண்டும். மேலும், அனுமதிச்சீட்டில் (Hall Ticket) உள்ள அறிவுரை (Instruction)களை கவனமாக படித்து வர வேண்டும். காலை 09.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதி கிடையாது. மேலும், 12.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். தவறினால் அவர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் (PAN CARD) / வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது ஒளிநகலை கொண்டு வர வேண்டும். தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம்(Electronic Watches), புளூடூத்(Bluethooth) போன்ற மின்னணு உபயோகப்பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை.
தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் மூலம் தேர்வு நாளன்று காலை 6 மணி முதல் சிறப்பு பேருந்து வசதிகள் தேர்வு மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



