H3N2 இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் பாதிப்பு மார்ச் இறுதி முதல் குறையத் தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது..
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல புதிய நோய்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு நகரங்களில் H3N2 வைரஸ், மக்களுக்கு பல்வேறு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களாக H3N2 வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் என்ணிக்கை அதிகரித்துள்ளது..

இதனிடையே H3N2 இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சலால் இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது.. கர்நாடகா, ஹரியானா மாநிலங்களில் H3N2 இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் இறந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.. சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சுயமாக மருந்துகளை எடுக்காமல் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
இந்நிலையில் இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸ் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மார்ச் இறுதிக்குள் இந்த வைரஸ் பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலு “ பருவகால காய்ச்சல் என்பது உலகம் முழுவதும் பரவியுள்ள இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படும் சுவாச நோயாகும், சில மாதங்களில் இந்த பாதிப்பு பொதுவாக அதிகரிக்கும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பருவகால காய்ச்சலின் 2 முறை உச்சம் காண்கிறது.. ஜனவரி முதல் மார்ச் வரையிலும், மற்றொன்று மழைக்காலத்திற்கு பிறகும் இந்தியாவில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் அதிகரிக்கும்.. தற்போது பரவி வரும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் மார்ச் இறுதியில் இருந்து குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..” என்று தெரிவித்துள்ளது..
நிகழ்நேர அடிப்படையில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் மூலம் பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பருவகால காய்ச்சல் நிலைமையை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது…

நோயாளிகளை வகைப்படுத்தல், சிகிச்சை நெறிமுறை மற்றும் காற்றோட்ட மேலாண்மை குறித்த வழிகாட்டுதல்களை பருவகால காய்ச்சல் குறித்த வழிகாட்டுதல்களில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது. மேலும் இந்த காய்ச்சல் பாதிப்புகளை கையாளும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மற்ற இன்ஃப்ளூயன்ஸா துணை வகைகளை விட H3N2 வைரஸ் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் நபர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 92% பேர் காய்ச்சலுடனும், 86% பேர் இருமலுடனும், 27% பேர் மூச்சுத் திணறலுடனும், 16% பேர் மூச்சுத்திணறலுடனும் உள்ளனர். கூடுதலாக, 16% பேருக்கு நிமோனியாவின் அறிகுறிகள் மற்றும் 6% வலிப்புத்தாக்கங்கள் இருந்தன என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது…
உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த H3N2 வைரஸ் சிகிச்சைக்காக Oseltamivir என்ற மருந்தை பரிந்துரைத்துள்ளது என்றும், இது அரசு சுகாதார அமைப்பின் மூலம் இலவசமாக கிடைக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. H3N2 வைரஸ் காய்ச்சலை சமாளிக்க, மாநிலங்களிடம் போதுமான வசதிகள் உள்ளன என தெரிவித்துள்ள மத்திய அரசு, ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், மத்திய அரசு ஆதரவு அளிக்க தயாராக உள்ளது என்றும் உறுதியளித்துள்ளது..