ஈரானுக்குப் பயணம் செய்த மூன்று இந்திய குடிமக்கள் காணாமல் போயுள்ளதாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. காணாமல் போன இந்திய இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஈரானில் உள்ள அதிகாரிகளை இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியத் தூதரகம் X இல் ஒரு பதிவில் “ஈரானுக்குப் பயணம் செய்த 3 இந்தியர்களின் குடும்பத்தினர், தங்கள் உறவினர்கள் காணாமல் போனதாக இந்தியத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். ஈரானிய அதிகாரிகளிடம் இந்த விஷயத்தை கடுமையாக எடுத்துக்கொண்டுள்ளது, மேலும் காணாமல் போன இந்தியர்களை அவசரமாக கண்டுபிடித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளது.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் குறித்து தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அவர்களின் குடும்பத்தினருக்குத் தொடர்ந்து தகவல்களைத் தெரிவித்து வருகிறது. இதற்கிடையில், பஞ்சாபைச் சேர்ந்த இளைஞர்களில் ஒருவரின் தாயார், மே 1 முதல் அவர்கள் அங்கு கடத்தப்பட்டதாகவும், கடத்தல்காரர்கள் அவர்களை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரானில் காணாமல் போன இந்த மூன்று இளைஞர்களுமே பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் பஞ்சாபின் சங்ரூர், நவான்ஷஹர் மற்றும் ஹோஷியார்பூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அவர்கள் ஒர்க் பெர்மிட் வாங்கிவிட்டு ஆஸ்திரேலியா நாட்டிற்கே செல்லவிருந்தனர். ஆனால், அவர்களின் ஏஜெண்ட் தான் ஈரானில் சில காலம் தங்க வேண்டும்.. அதன் பிறகே ஆஸ்திரேலியா செல்ல விசா கிடைக்கும் எனச் சொல்லி அங்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூரில் வசிக்கும் ஹுஸ்ன்ப்ரீத்தின் தாயார், தனது மகனை வெளிநாடு அனுப்புவதாகக் கூறிய பயண முகவர்கள் தங்களிடம் இருந்து கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு, அவனை பாதுகாப்பில்லாத “டன்கி” பாதை வழியாக ஈரானுக்கு அனுப்பியதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். மகனின் கைகள் கயிறுகளால் கட்டப்பட்டு, உடலில் பல்வேறு வெட்டுக்காயங்கள், சிராய்ப்பு தடங்கள் இருக்கும் புகைப்படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாக அவர் தெரிவித்தார்.
இளைஞர்களை ஈரானுக்கு அனுப்பிய ஹோஷியார்பூரைச் சேர்ந்த முகவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் மீது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையில், காணாமல் போனவர்களில் ஒருவரான ஹோஷியார்பூரின் அம்ரித்பாலின் குடும்பத்தினர், பஞ்சாப் அமைச்சரவை அமைச்சர் குல்தீப் சிங் தலிவால் மற்றும் ஹோஷியார்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜ்குமார் ஆகியோரை சந்தித்து, தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வர உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read more: பெரும் சோகம்.. தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்..!!