உலகின் பெரிய ரயில்வே வலையமைப்பாக விளங்கும் இந்திய ரயில்வேயில், தினசரி சுமார் 5 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர். இந்தப் பிரம்மாண்டமான போக்குவரத்து அமைப்பில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மிக முக்கியமான சவால் ஆகும். இந்த சவாலை எதிர்கொள்ள, ரயில்வே பாதைகளில் ஒரு சிறப்புக் கருவி பயன்படுத்தப்படுகிறது. அதுதான் ஆக்ஸில் கவுன்டர் பெட்டி (Axle Counter Box).
ஆக்ஸில் கவுன்டர் பெட்டி என்றால் என்ன..?
ரயில்வே தண்டவாளங்களின் அருகே சுமார் 3 முதல் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒருமுறை அலுமினிய நிறத்தில் வைக்கப்பட்டுள்ள சிறிய பெட்டிகளையே ஆக்ஸில் கவுன்டர் பெட்டிகள் என்று அழைக்கிறோம். இவை சாதாரணப் பெட்டிகள் போலத் தோன்றினாலும், ரயில் விபத்துகளைத் தடுத்துப் பயணிகளின் உயிரைக் காக்கும் ஒரு நுட்பமான கருவியாகும். இந்தக் கருவியின் முக்கியப் பணி, ரயில் ஒரு குறிப்பிட்ட பாதையில் செல்லும் போது, அந்த ரயிலில் உள்ள சக்கரங்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவதுதான்.
எப்படி வேலை செய்கிறது..?
* ரயில் பாதைகளில் ஒவ்வொரு 3 முதல் 5 கி.மீ. தூரத்திற்கும் சில சென்சார்கள் (Sensors) பொருத்தப்பட்டிருக்கும்.
* ரயில் வரும்போது, அதன் சக்கரங்கள் தண்டவாளத்தை அழுத்தும்போதெல்லாம், இந்த சென்சார்கள் உடனே தகவல்களை ஆக்ஸில் கவுன்டர் பெட்டிக்குள் இருக்கும் சிறிய கணினிக்கு அனுப்புகின்றன.
* இந்த தகவல், ஃபைபர் ஆப்டிக் கேபிள் வழியாகப் பாதுகாப்பான முறையில் கணினிக்கு சென்றடையும்.
* ரயிலின் ஒரு பகுதியில் உள்ள சக்கரங்கள் எண்ணிக்கையை இந்த சென்சார்கள் கணக்கிட்டு அனுப்பும். ரயிலின் சக்கரங்கள் அனைத்தும் அந்தப் பகுதியை முழுவதுமாக கடந்தவுடன், வெளியேறும் சக்கரங்களின் எண்ணிக்கையையும் கணினி சரிபார்க்கும்.
* ரயில் நுழைந்தபோது இருந்த சக்கர எண்ணிக்கையும், வெளியேறிய சக்கர எண்ணிக்கையும் சரியாக இல்லாவிட்டால் (அதாவது ஏதேனும் ஒரு பெட்டி அல்லது வாகனம் தண்டவாளத்தில் இருந்து தவறி இருந்தால் அல்லது பிரிந்திருந்தால்), கணினி உடனடியாக ரயிலை நிறுத்த சொல்லி சிக்னல் அனுப்பும். இதன் மூலம் விபத்து ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
பயணிகளுக்கான பாதுகாப்பு உறுதி :
* ஆக்ஸில் கவுன்டர் பெட்டியானது, ரயிலின் அனைத்து பெட்டிகளும் ஒரு பாதையை முழுமையாக கடந்துவிட்டதா என்பதை உறுதி செய்கிறது. இந்த தொழில்நுட்பம் ரயிலின் வேகம் மற்றும் திசையைக் கண்காணிக்கவும் உதவுகிறது.
* ஆக்ஸில் கவுன்டர் பெட்டியின் செயல்பாட்டின் மூலம், ரயில்வே பணியாளர்கள் பாதையில் உள்ள எந்தவொரு தவறுகளையும் முன்கூட்டியே கண்டறிந்து, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதன் விளைவாக, ரயில் விபத்துகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.



