இந்தியாவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 327 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்யன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு முதல் 3 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. இதில், உஸ்மான் கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 43 ரன்களில் வெளியேறினார். மார்னஸ் லபுஷேன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இருவரும் மாறி மாறி பவுண்டரியாக விளாசியதன் மூலம் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் டிராவிஸ் ஹெட் இந்தியாவிற்கு எதிராக தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
அதுமட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மறுபுறம் ஸ்டீவ் ஸ்மித் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடியை பிரிக்க இந்திய வீரர்கள் கடுமையாக போராடியும் பலன் இல்லை. இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டிற்கு நிலைத்து நின்று 251 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர்.அதோடு மைக்கேல் கிளார்க் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 214 ரன்கள் பார்ட்னர்ஷிப், சிட்னி கிரேகோரி மற்றும் ஹெரி ஹாட் ஆகியோரது 221 ரன்கள் பார்ட்னர்ஷிப் மற்றும் டான் பிராட்மேன் மற்றும் ஆர்ச்சி ஜாக்சன் ஆகியோரது 243 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை முறியடித்துள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்த ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீவ் வாக் 239 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை முறியடித்துள்ளனர். ஓவல் மைதானத்தில் ஸ்டீவ் ஸ்மித் 138 (நாட் அவுட்), 7, 143, 80, 23 மற்றும் 95 ரன்கள் (நாட் அவுட்) என்று ரனகள் சேர்த்துள்ளார். இறுதியாக முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது. இதில், டிராவிஸ் ஹெட் 156 பந்துகளில் 22 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 146 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 227 பந்துகளில் 14 பவுண்டரி உள்பட 95 ரன்களும் எடுத்து களத்தில் இருக்கின்றனர்.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர். இதில் ஒரு படி மேல் சென்ற தாக்கூர் 4 நோபால் வரையில் வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவீந்திர ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் விக்கெட்டுகள் கைப்பற்றவில்லை.