தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (2-10-2025) காலை மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாலை தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளில் கோபல்பூருக்கு அருகில் கரையை கடந்தது.
சௌராஷ்ட்ரா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 01-10-2025 காலை வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு நகர்ந்து, அன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அன்று நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று, 02-10-2025 அன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (03-10-2025) காலை துவாரகாவிலிருந்து (குஜராத்) மேற்கு-தென்மேற்கே சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ளது.
இது, அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். பிறகு, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், சற்று மேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் மேற்கு-தென்மேற்கே நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில இடங்களில் சற்று குறையக்கூடும். தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், வடமேற்கு – மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திரா – ஒரிசா – மேற்கு வங்க கடலோரப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், ஏனைய வடகிழக்கு- மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், குஜராத் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், இந்த பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Read more: வங்க தேசம், நேபாளத்தை தொடர்ந்து மொரோக்காவிலும் வெடித்தது Gen Z போராட்டம்.. 3 பேர் பலி..!!



