சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் சராசரியாக பல இடங்களில் 7-8 செ.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவக்காற்றின் தீவிரம் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி வருகிறது. பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் நீச்சல் குளம் போல் மழை நீர் தேங்கி உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை, அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் மழையால் கிண்டி – கோயம்பேடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எழும்பூர் தமிழ் சாலை, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாரிமுனை, வடபழனி, மயிலாப்பூர் முசிறி சுப்ரமணியன் சாலை, கோயம்பேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் வாகனங்களை இயக்க முடியாமல், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை மழைக்கு இருவர் உயிரிழந்து உள்ளனர். புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்ததில் சாந்தி என்ற பெண் உயிரிழந்து உள்ளார். மேலும், வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தேவேந்திரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் 20,000 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. கனமழையால் 25 இடங்களில் விழுந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.