நேபாள நாட்டில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்றவர்கள் தண்ணீரில் மூழ்கி ஜலசமாதியாகினர். நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதில் 5 பேர் உயிரிழந்தனர். அந்த சோகம் மறைவதற்குள் இப்போது ஹெலிகாப்டர் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டு அதில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாகச பயணம் செய்ய வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். விடுமுறை காலத்தில் அதிக செலவு செய்து சுற்றுலா செல்லும் போது விபத்தில் சிக்கி உயிரிழப்பும் நேரிடுகிறது. நேபாள நாட்டின் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்ற ஹெலிகாப்டரில் 6 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில், அந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து, அந்த ஹெலிகாப்டர் மாயமான நிலையில், உடனடியாக மீட்புக் குழுவினர் அந்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், காணாமல் போன ஹெலிகாப்டரின் இடிபாடுகளை தேடுதல் குழு கண்டுபிடித்துள்ளது. லிகு பிகே கிராம சபை மற்றும் லமாஜுரா தண்டா ஆகிய இடைப்பட்ட பகுதியில் அந்த விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த விமானத்தில் பயணித்த 6 பேரில் 5 பேரின் உடல்களையும் அந்த கிராம மக்கள் மீட்டுள்ளதாக கோஷி மாகாண காவல்துறை டிஐஜி ராஜேஷ்நாத் பாஸ்டோலா தெரிவித்துள்ளார்.
எவரெஸ்ட் சிகரத்தை ரசிக்க சென்ற போது ஹெலிகாப்டர் மலை உச்சியில் இருந்த மரத்தில் மோதியதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட உடல்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. மீதமுள்ள ஒருவரின் நிலை என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை. அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.