பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஹெலிகாப்டர் பயண சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூருவில் முன்னணி ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதன் காரணமாக உள்ளூர் மற்றும் வெளியூர் என பலரும் அங்கு வேலை நிமித்தமாக வசித்து வருகின்றனர். அதனால், அங்கு வாகன நெரிசல் கடுமையாக இருக்கும். இத்தகைய சூழலில் பெங்களூரு நகருக்குள் மட்டுமே சேவை வழங்கும் வகையில், ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக இந்த சேவை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து HAL பகுதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிக்கு சாலை மார்க்கமாக பயணிக்க 2 மணி நேரம் ஆகும் நிலையில், ஹெலிகாப்டர் மூலம் பயணிக்கும் போது வெறும் 12 நிமிடங்கள் தான் ஆகும் என சொல்லப்படுகிறது.

இப்போதைக்கு நாள் ஒன்றுக்கு ஒரே முறை மட்டுமே இரு மார்க்கத்திலும் சேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி மற்றும் மாலை 4.15 என பயணத்திற்கான நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் இந்த ஹெலிகாப்டர் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ள நிலையில், இந்த பயணத்திற்கான கட்டணம் ரூ.3,250 என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் டாக்சி சேவை இப்படி மாற்றம் பெறலாம் எனவும் ’பிளேட் இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.