முதுகலைப் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தொடர்பாக ஏதாவது சந்தேகம் இருந்தால் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வு செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான். ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA எம்பிஏ, மற்றும், எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுவிற்கு (டான்செட் 2023) விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான பொது நுழைவுத்தேர்வு மார்ச் 25-ம் தேதி நடைபெறுகிறது.
மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் 11-ம் தேதி :https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இந்தத் தேர்வு 15 நகரங்களில் 40 மையங்களில் நடைபெற உள்ள தேர்வினை எழுதுவதற்கு 39 ஆயிரத்து 249 பேர் பதிவு செய்துள்ளனர். டான்செட் எம்சிஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை 25-ம் தேதி காலையில் 9,820 பேரும், எம்பிஏ படிப்பிற்கான தேர்வினை 25 மாலையில் 24,468 பேரும் எழுதுகின்றனர்.
CEETA-PG எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் ஆகிய படிப்பில் சேர்வதற்கான தேர்வினை 26-ம் தேதி 4,961 பேர் எழுத உள்ளனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் குறித்தோ தேர்வு குறித்து எழும் சந்தேகங்களுக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் நுழைவுத்தேர்வு மையத்தின் தொடர்பு எண் 044 22358314, 044 22358289 ஆகிய எண்களிலோ அல்லது tanceeta@gmail.com என்ற இணையதள முகவரியிலோ தொடர்புக் கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.