முருகப் பெருமானை வழிபடுபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த ஆண்டுகளில் முருகனின் கோவில்களையும், முருகனின் மந்திரங்கள், முருகன் பற்றிய பாடல்களையும் தேடி தேடி படிப்பவர்கள், தரிசிப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
முருகப் பெருமான் என்றாலே ஆறுபடை வீடுகள் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். இந்த ஆறுபடை வீடுகள் தவிர தமிழகத்தில் பல சக்தி வாய்ந்த முருகன் கோவில்கள், பல பகுதிகளில் அமைந்துள்ளன. அந்த வகையில் சென்னையில் உள்ள முருக பக்தர்கள் எளிதில் சென்று வழிபடுவதற்கு ஏற்ற சக்தி வாய்ந்த முருகன் கோவில்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
வடபழநி ஆண்டவர்: சென்னையில் மிகுந்த பக்தர்கள் தரிசிக்கும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். தென் பழநியில் செய்யப்படும் காணிக்கைகள், வேண்டுதல்கள் இங்கும் நிறைவேறும் என நம்பப்படுகிறது. பலரின் குலதெய்வமாகவும் விளங்கும் இந்த முருகன், ‘வடபழநி ஆண்டவர்’ என அழைக்கப்படுகிறார். ஆரம்பத்தில் முருகனின் படம் மட்டும் வைத்து வழிபட்டு வந்த நிலையில், பிறகு கோவில் அமைக்கப்பட்டது.
குன்றத் திருமலை முருகன்: முருகன் இங்கு சிறிய குழந்தை வடிவில், கையில் தண்டம் வைத்தபடி காட்சி தருகிறார். மற்ற முருகன் கோவில்களைவிட வித்தியாசமாக, இங்கு மயிலுக்கு பதிலாக யானை வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சி பெரியவர் முன்கூட்டியே இங்கு முருகன் கோவில் அமைவது குறித்து கண்ணறிவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பக்தர்கள் குன்றை சீர்செய்யும் போது, மலையின் உச்சியில் வேல் ஒன்று கிடைத்ததை அடையாளமாகக் கொண்டு, முதலில் அதையே பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பின் சிலை பிரதிஷ்டை செய்து, இன்று ஒரு முழுமையான கோவிலாக திகழ்கிறது.
பெசன்ட் நகர் அறுபடை முருகன் கோவில்: சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கும், புகழ்பெற்ற அஷ்டலட்சுமி கோவிலுக்கும் அருகில் அமைந்துள்ளது அறுபடை முருகன் கோவில். முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று அனைவராலும் தரிசனம் செய்ய முடியாது. இந்த குறை தீர ஒரே வளாகத்தில் ஆறு படை முருகனுக்கும் தனி சன்னதி இல்லாமல் தனி கோவிலாகவே கட்டி உள்ளனர். ஆறு படை வீடுகளில் இருந்தும் புனிதத்தன்மை எடுத்து வரப்பட்டு, இங்கு ஒரே இடத்தில் தனித்தனி கோவில்களாக கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆறுபடை முருகனையும் வழிபட்ட பலனை பெற முடியும்.
சிறுவாபுரி பால சுப்ரமணியர்: சென்னையிலிருந்து 33 கி.மீ. தூரத்தில், அமைந்துள்ள இந்த தலம், சமீப காலமாக மிகுந்த புகழ் பெற்றுவருகிறது. செவ்வாய்கிழமைகளில் இக்கோவிலுக்கு சென்று, சொந்த வீடு கட்ட வேண்டி வேண்டிக்கொண்டால், அடுத்த ஆண்டுக்குள் அந்த கனவு நனவாகும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது வெறும் நம்பிக்கை அல்ல. ஏராளமானோர் இங்கு வேண்டியதற்குப் பிறகு சொந்த வீடு கட்டி மகிழ்ந்துள்ளனர். இதனால், நாளுக்கு நாள் இந்த தலத்தில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி: சென்னை பாரிமுனை அருகே அமைந்துள்ள இந்த அரிய தலத்தில், முருகனே தாம் அமர விரும்பிய இடத்தில் பீடமின்றி எழுந்தருளியுள்ளர். இது தான் கந்தகோட்டம் முருகன் கோவில். வேலைக்காக தோண்டிய குழியில் கிடைத்த முருகன் சிலையை அந்த பக்தர் எடுத்துக் கொண்டு செல்லும் போது, வழியில் இந்த இடத்தில் சிலையை வைத்துள்ளார். மீண்டும் இந்த இடத்தில் இருந்து முருகனின் சிலையை அகற்ற முடியவில்லை. முருகனே விரும்பி வந்து அமர்ந்த இடம் என்பதால் இங்கு பீடம் ஏதும் இல்லாமலேயே முருகன் காட்சி தருகிறார். தரையில் நின்ற கோலத்தில் காட்சி தரும் இந்த தல முருகனை வழிபட்டால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் விலகி விடும்.
Read more: விநாயகர் சிலையில் தும்பிக்கை எந்த திசையை நோக்கி இருந்தால் அதிர்ஷ்டம் தரும் தெரியுமா..?