தமிழக அரசியல் மற்றும் திரையுலகை உலுக்கி வரும் நடிகர் விஜய்யின் விவாகரத்து விவகாரத்தில், தற்போது புதிய சட்ட ரீதியான கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த பிப்ரவரி 24 அன்று, விஜய்யின் மனைவி சங்கீதா ‘சிறப்பு திருமணச் சட்டத்தின்’ (Special Marriage Act) கீழ் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் தீவிரத்தன்மை கருதி, அது தற்போது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது நீதிமன்ற நடைமுறைகள் அல்ல; மாறாக, அந்த வழக்கின் மிக ரகசியமான ‘அபிடவிட்’ (Affidavit) எனப்படும் வாக்குமூல நகல் எப்படி பொதுவெளியில் கசிந்தது என்பதுதான். வழக்கமாக திரையுலகப் பிரபலங்களின் குடும்பப் பிரச்சனைகள் நீதிமன்றப் படிக்கட்டுகளை மிதிப்பது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னதாக தனுஷ், ரவி மோகன், ஜி.வி. பிரகாஷ் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் விவாகரத்து விவகாரங்களும் நீதிமன்றம் வரை சென்றன. ஆனால், அவர்களின் தனிப்பட்ட புகார்கள் அல்லது வாக்குமூலங்கள் இதுபோன்று வரிக்கு வரி சமூக வலைதளங்களில் கசிந்ததில்லை.
குடும்ப நல நீதிமன்றங்களை பொறுத்தவரை, தம்பதியரின் அந்தரங்கம் காக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான விதிமுறை. அப்படி இருக்கையில், விஜய்யின் வழக்கில் மட்டும் இவ்வளவு விரிவான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணங்கள் வெளியானது எப்படி என்ற கேள்வி வலுத்துள்ளது. இது திட்டமிட்டு யாரோ ஒரு தரப்பால் கசியவிடப்பட்டதா அல்லது நீதிமன்ற நடைமுறையில் ஏற்பட்ட குளறுபடியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி விஜய் அரசியல் களத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவரது அரசியல் எதிரிகள் யாரேனும் இதில் பின்னணியில் இருக்கிறார்களா என்ற கோணத்திலும் அவரது ரசிகர்கள் விவாதித்து வருகின்றன.



