இந்தியாவில் தங்கம் என்பது, பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.. இருப்பினும், ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் அல்லது நகைகளை சேமிக்கலாம் என்பதற்கு வரம்பு உள்ளது. நீண்ட காலமாக, தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில், இந்தியா 31.25 டன் தங்கம் கொள்முதல் செய்து 4 இடத்தைப் பிடித்தது என்று உலக தங்க கவுன்சில் அறிக்கை தெரிவித்துள்ளது.
எனவே தங்கத்தை வீட்டில் சேமித்து வைப்பதில் அரசாங்க விதிகள் என்ன சொல்கிறது என்பதையும் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன்படி திருமணமான பெண் குறைந்தபட்சம் 500 கிராம் தங்கத்தை வைத்திருக்கலாம்.. திருமணமாகாத பெண்ணுக்கு, பரிந்துரைக்கப்பட்ட அளவு 250 கிராம் ஆகும்… அதே நேரம், ஒரு ஆண் 100 கிராம் தங்கம் அல்லது நகைகளை வைத்திருக்கலாம்..
அரசு விதிகளின்படி, தங்கத்தின் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பின் கீழ் இருந்தால், வருமான வரி சோதனை நடவடிக்கையின் போது ஆபரணங்கள் அல்லது தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முடியாது. தங்கம் அல்லது நகைகளை விவசாயம், வீட்டு சேமிப்பு அல்லது சட்டப்பூர்வமாக மரபுரிமை போன்ற வெளிப்படுத்தப்பட்ட வருமானம் மூலம் வாங்கினால், அந்த தங்கத்திற்கு எந்த வரியும் விதிக்கப்படாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் விதிகள் கூறுகின்றன. அறியப்பட்ட வருமான ஆதாரங்களைப் பயன்படுத்தி தங்கம் அல்லது நகைகளை வாங்கும் வரை அவற்றை வைத்திருப்பதற்கு வரம்பு இல்லை என்று விதிகள் தெரிவிக்கின்றன.
தங்கத்திற்கு எப்போது வரி செலுத்த வேண்டும்? உங்கள் தங்கத்தை வாங்கிய மூன்று வருடங்களுக்குள் விற்க முடிவு செய்தால், அது வருமான வரி அடுக்கு விகிதங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரிக்கு உட்பட்டது. தங்கம் வாங்கிய மூன்று ஆண்டுகளுக்கு மேல் விற்கப்பட்டால், அந்த விற்பனைக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.