இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதி இல்லாமல், சோனி நிறுவனம் பயன்படுத்தி வருகிறது என்றும், அந்த பாடல்களை மாற்றியமைப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.. மேலும் தனது பாடல்களை தனது அனுமதியின்றி யூ டியூப் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் ஒலிபரப்புவதன் மூலம் வருமானத்தையும் சோனி நிறுவனம் ஈட்டி வருவதாகவும் இளையராஜா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.. சோனி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது..
காப்புரிமை சட்டப்படி தனது இசைப்படைப்புகளுக்கு தானே உரிமையாளர். அதற்கு உரிமைகோர யாருக்கும் அதிகாரமில்லை.. ஏற்கனவே இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.. அந்த தீர்ப்பை மீறக்கூடிய வகையில் சோனி நிறுவனம் செயல்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று என்.செந்தில் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது இளையராஜா சார்பில் மூத்த வழக்கறிஞர், சோனி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை காப்புரிமை சட்டத்தை மீறும் செயல் என வாதிட்டார்..
அப்போது சோனி நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் உரிமைகளை பெற்றுள்ளதாகவும் எனவே இளையராஜாவுக்கு தனியாக எந்த தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்று வாதிட்டார்.
இதை தொடர்ந்து, இளையராஜாவின் இசையை வணிக ரீதியாக பயன்படுத்தியதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை அக்டோபர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.. இதுகுறித்து சோனி நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.



