கேரள மாநிலம் கொல்லம் கரிக்கோடு பகுதியில், மதுபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த கணவன் தன் மனைவி மீது சமையல் எரிவாயு சிலிண்டரை தூக்கிப் போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கரிக்கோடு பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் (54) மற்றும் அவரது மனைவி கவிதா (46) ஆகியோருக்கு ஒரு மகள் உள்ளார். மதுசூதனனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவம் நடந்த முந்தைய நாள் இரவு, மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவனை, மனைவி கவிதா தட்டிக் கேட்டதாக தெரிகிறது.
இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்ற மதுசூதனன், கவிதாவை மிதித்து கீழே தள்ளியுள்ளார். தாயைத் தடுக்கச் சென்ற மகளையும் அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.
மகளின் கண் முன்னே கொடூரம் :
அடுத்த நிமிடமே, கீழே விழுந்து கிடந்த கவிதாவை தாக்கிய மதுசூதனன், அருகில் இருந்த கியாஸ் சிலிண்டரை தூக்கிக் கவிதாவின் தலையில் பலமாகப் போட்டுள்ளார். இந்த தாக்குதலில் கவிதாவின் தலை சிதைந்து, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த செயலை தன் கண்முன்னே பார்த்த மகள், அதிர்ச்சியில் அலறி துடித்துள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்துள்ளனர். அவர்கள் கவிதா கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனடியாக இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொல்லம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த கவிதாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மனைவி கவிதாவைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த கணவன் மதுசூதனனை கைது செய்தனர்.



