மனைவியை கொலை செய்ய கணவன் ஏவிவிட்ட விஷப் பாம்பு, 2 முறை கடித்தும் உயிர் பிழைத்த அதிசயம் மத்தியப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் மந்த்சூரை சேர்ந்தவர் மோஜிம். இவருடைய மனைவி சானுபி. இவர் மோஜிமிடம் சண்டைப் போட்டுக் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து, அஜ்மேரி ஹலிமா என்ற பெண்ணை மோஜிம் 2-வது திருமணம் செய்து கொண்டார். திடீரென மனம் மாறிய முதல் மனைவி மீண்டும் திரும்பி வந்துவிட்டார். இதனால், 2-வது மனைவியை கொலை செய்ய மோஜிம் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு பாம்பு பிடிக்கும் நண்பர் ஒருவருடன் பேசி விஷப்பாம்புடன் வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார். அந்த நண்பர் மிக கொடுமையான விஷம் கொண்ட பாம்பை மோஜிமிடம் கொடுத்துள்ளார்.

கணவர் மோஜிம் அந்த பாம்பை இரவில் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் விட்டுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த 2-வது மனைவி ஹலிமாவை கடித்துள்ளது. காலையில் ஹலிமா இறந்துவிடுவார் என்று மோஜிம் எதிர்பார்த்துள்ளார். ஆனால், அது நடக்கவே இல்லை. இதனையடுத்து, காலையில் ஹலிமா எழுந்துள்ளார். அப்போது, மோஜிம் அவரது நண்பர்கள் சேர்ந்து அவருக்கு விஷ ஊசி போட்டனர். இதனால், அதிர்ச்சி அடைந்து ஹலிமா அலறி சத்தம்போட்டார். இவரின் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து ஹலிமாவை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். சரியான நேரத்தில் ஹலிமாவிற்கு சிகிச்சை கொடுக்கப்பட்டதால் அவர் உயிர் தப்பினார். இதையடுத்து, கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் மோஜிம்மையும், அவரது நண்பரையும் கைது செய்தனர்.